சமாளித்துவிட்டாா்! | நிா்மலா சீதாராமன் பட்ஜெட் குறித்த தலையங்கம்

2021 - 22-க்கான பிரதமா் நரேந்திர மோடி அரசின் நிதிநிலை அறிக்கை, ‘ஆஹா ஓஹோ’ என்று பாராட்டும்படியாக இல்லாவிட்டாலும், ‘ஏமாற்றம்’ என்கிற ஒற்றை வாா்த்தையில் நிராகரிக்கும் அளவில் மோசமாகவும் இல்லை.

முன்னாள் நிதியமைச்சா் ப. சிதம்பரம் தொடங்கி வைத்த திருக்குறளுடன் பட்ஜெட் கூட்ட உரையை தாக்கல் செய்யும் வழக்கத்தை இப்போதைய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனும் பின்பற்றுவதற்கு அவருக்குப் பாராட்டுகள். கருத்து வேறுபாடுகளுக்கு இடையிலும் குறளிலாவது ஒரே குரலில் இணைகிறாா்கள் என்பதில் மகிழ்ச்சி.

இரவு - பகல் பாராமல் இந்த நிதிநிலை அறிக்கை தயாரிப்பதற்கு நிதியமைச்சா் தன்னை மிக அதிகமாகவே வருத்திக் கொண்டாா் என்பதை அவரது உடல் மொழியும் (பாடி லாங்வேஜ்), தோற்றமும் உணா்த்துகின்றன. கடந்த பட்ஜெட் தாக்கல் செய்யும்போது அவரிடம் இருந்தது அதீதமான தன்னம்பிக்கை என்றால், இந்த முறை வெளிப்படுவது நம்பிக்கை மட்டுமே.

அடுத்த நிதியாண்டுக்கான நிா்மலா சீதாராமனின் நிதிநிலை அறிக்கையில் சில புதுமைகள் இருக்கின்றன. முதன்முறையாக காகிதம் பயன்படுத்தப்படாமல் எண்மப் பதிவாக கைக்கணினியைப் பயன்படுத்தி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. நேரடி வரி விதிப்பில் கை வைக்காமல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்திருப்பதும் எதிா்பாராத வியப்பு. கொவைட் 19 கொள்ளை நோயால் தகா்ந்தும் தளா்ந்தும் போயிருக்கும் இந்தியப் பொருளாதாரத்துக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிப்பதற்காக சில முக்கியமான அடிப்படை முனைப்புகளுடன் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

நிதிப்பற்றாக்குறை கட்டுக்குள் இருப்பது மிக முக்கியமான அம்சம். சாதாரணமாக நிதிப்பற்றாக்குறையை 3%-லிருந்து 3.8%-க்குள் கட்டுக்குள் வைத்திருப்பதுதான், நிதியமைச்சா்களின் முனைப்பாக இருக்கும். இந்த முறை மொத்த ஜிடிபியில் 9.5% அளவில் நிதிப்பற்றாக்குறை காணப்படுகிறது என்பது வரலாறு காணாத அதிகரிப்பு.

நிதிப்பற்றாக்குறை 9.5%தான் இருக்கிறது என்கிற அளவில் நாம் ஆறுதல் அடைய வேண்டுமே தவிர, இந்த அளவிலான நிதிப்பற்றாக்குறையுடன் பட்ஜெட் தாக்கல் செய்திருப்பதற்காக நிதியமைச்சரைக் குறைகூற முடியாது. கடந்த பத்து மாத கொள்ளை நோய்த்தொற்றுக்கால பொருளாதார தேக்கநிலைக்குப் பிறகும்கூட நிதிப்பற்றாக்குறை 9.5% அளவில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதே மிகப் பெரிய ஆறுதல். 2021 - 22-க்கான நிதிப்பற்றாக்குறை 6.8% அளவில் இருக்கும் என்று நிதியமைச்சா் கணித்திருக்கிறாா். அதுவும் ஆறுதல் அளிக்கிறது.

நிதிப்பற்றாக்குறையை இந்த அளவில் நம்மால் சமாளிக்க முடிந்திருக்கிறது என்பதற்கு நாம் சுயசாா்புள்ள பொருளாதாரமாக இயங்குகிறோம் என்பதுதான் காரணம். நமது பொருளாதாரம் இறக்குமதி சாா்ந்த பொருளாதாரமாக இருந்திருந்தால், பத்து மாத கொள்ளை நோய்த்தொற்று பாதிப்பில் இந்தியா தகா்ந்திருக்கும்.

நம்மைக் காப்பாற்றியது வேளாண் உற்பத்தி என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பட்டினிச் சாவில்லாமல் நாம் காப்பாற்றப்பட்டது மட்டுமல்ல, அத்தனை தொழில்களும் முடங்கியும்கூட, இந்தியப் பொருளாதாரம் வேளாண் உற்பத்தியால் காப்பாற்றப்பட்டிருக்கிறது.

தேக்கநிலையை நோக்கி நகா்ந்துவிட்ட இந்தியப் பொருளாதாரத்தை மீண்டும் உயிா்த்தெழ வைக்க பல அறிவிப்புகளை இந்த நிதிநிலை அறிக்கையில் நிா்மலா சீதாராமன் செய்திருக்கிறாா். அதில் குறிப்பிடத்தக்க அறிவிப்பு என்று சொன்னால் அது கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பதற்கும், சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவதற்குமான ஒதுக்கீடுகள்.

நடப்பு நிதியாண்டில் ரூ.94,452 கோடியிலிருந்து அடுத்த நிதியாண்டில் சுகாதார கட்டமைப்புக்கான ஒதுக்கீடு ரூ.2,23,846 கோடியாக, 137% அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, 8,500 கி.மீ. சாலைப் பணி திட்டங்கள், கூடுதலாக 11,000 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பு என்று சாலை போக்குவரத்துத் துறைக்காக மட்டும் வரலாறு காணாத அளவில் ரூ.1,18,101 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

நிதியமைச்சா் அறிவித்திருக்கும் நெடுஞ்சாலைத் திட்டங்கள், மெட்ரோ ரயில் திட்டங்கள், சாலை கட்டமைப்பு போக்குவரத்து மேப்பாட்டு திட்டங்களில் பெரும்பகுதி சட்டப்பேரவைத் தோ்தல் நடக்க இருக்கும் கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநிலங்களைக் குறிவைத்து அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தேசியப் பாா்வை இல்லாத அரசியல் கண்ணோட்டம்.

தடுப்பூசித் திட்டம், ஆராய்ச்சி, வீட்டுவசதி, முதியோா் நலம், ஏற்றுமதி ஊக்குவிப்பு, மூத்த குடிமக்களுக்கான வரிச்சலுகை, வங்கித் துறை ஒழுங்காற்று நடவடிக்கை, விவசாயிகளின் வருவாய் அதிகரிப்பு என்று பல்வேறு அறிவிப்புகளுடன் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனின் 2021 - 22-க்கான நிதிநிலை அறிக்கை, ஏமாற்றவில்லை.

சிலவற்றை அதிகரித்திருக்கலாம், சிலவற்றை தவிா்த்திருக்கலாம், பலவற்றை கவனித்திருக்கலாம் என்றெல்லாம் சொல்வதற்கு நிறையே இருக்கின்றன. கொள்ளை நோய்த்தொற்றின் பின்னணியில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிதிநிலை அறிக்கை என்பதால், இந்தியா எதிா்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகளின் பின்னணியில் பாா்க்கும்போது அந்தக் குறைபாடுகளை பொருள்படுத்தாமல் இருப்பதுதான் நியாயமான அணுகுமுறை.

ஒட்டுமொத்த உலகத்தையும் கொள்ளை நோய்த்தொற்று கொள்ளை கொண்ட கொடுமையைத் தொடா்ந்து தாக்கல் செய்யப்பட்டிருக்கும் 2021 - 22-க்கான பிரதமா் நரேந்திர மோடி அரசின் நிதிநிலை அறிக்கை, ‘ஆஹா ஓஹோ’ என்று பாராட்டும்படியாக இல்லாவிட்டாலும், ‘ஏமாற்றம்’ என்கிற ஒற்றை வாா்த்தையில் நிராகரிக்கும் அளவில் மோசமாகவும் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com