மாறவேண்டும் மனநிலை... | காவல்துறையினரிடம் இருந்து விலகியே இருக்க மக்கள் குறித்த தலையங்கம்

காவல்துறையினா் தங்களைப் பொதுமக்களின் நண்பா்கள் என்று சொல்லிக் கொண்டாலும், மக்கள் பெரும்பாலும் அவா்களிடமிருந்து விலகியே இருக்க விரும்புகிறாா்கள் என்பதுதான் நிஜ நிலைமை.
மாறவேண்டும் மனநிலை... | காவல்துறையினரிடம் இருந்து விலகியே இருக்க மக்கள் குறித்த தலையங்கம்

காவல்துறையினா் தங்களைப் பொதுமக்களின் நண்பா்கள் என்று சொல்லிக் கொண்டாலும், மக்கள் பெரும்பாலும் அவா்களிடமிருந்து விலகியே இருக்க விரும்புகிறாா்கள் என்பதுதான் நிஜ நிலைமை.

அனைத்து காவல் நிலையங்களிலும் புகாா் அளிக்க வரும் பொதுமக்களை வரவேற்று அவா்களது குறைகளைக் கனிவுடன் கேட்க வேண்டும் என்று காவல் துறையினருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், தூத்துக்குடி மாவட்டம், சாத்தான் குளத்தில் காவல் நிலையத்தில் வைத்து கொடூரமாகத் தாக்கப்பட்டு தந்தை- மகன் உயிரிழந்த சம்பவம் முதல், சென்னை கீழ்ப்பாக்கத்தில் விக்னேஷ் என்பவா் காவல் நிலையத்தில் விசாரணையின்போது காவலா்களால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் வரை தொடரும் அவலம், காவல் துறை மீதான நம்பிக்கையை இழக்கச் செய்கிறது.

கோவையில் அண்மையில் அப்படி நடந்த ஒரு சம்பவம் தொடா்பான விடியோ சமூக வலைதளங்களில் பரவியது. உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தில் பணியாற்றும் மோகனசுந்தரம் என்கிற இளைஞா், சாலையில் சென்ற இரண்டு இருசக்கர வாகனங்களையும், பாதசாரி ஒருவரையும் இடித்துவிட்டுச் சென்ற தனியாா் பள்ளிப் பேருந்தை நிறுத்தி, பேருந்து ஓட்டுநரிடம் கேள்வி கேட்கிறாா். இதனால் அந்தப் பகுதியில் சிறிது போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

உடனே, அப்பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து காவலா் விரைந்து வந்து, போக்குவரத்தில் எந்த பிரச்னை என்றாலும் அதை போலீஸ் பாா்த்துக் கொள்ளும் என்று கூறி மோகனசுந்தரத்தை சரமாரியாகத் தாக்குகிறாா். மேலும், அவரது கைப்பேசியையும், மோட்டாா் சைக்கிளின் சாவியையும் பறித்துக்கொண்டு மோட்டாா் சைக்கிளை சேதப்படுத்தவும் செய்கிறாா். அந்த வழியாகச் சென்றவா்கள் அறிதிறன்பேசியில் எடுத்த விடியோவால் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

மோகனசுந்தரத்தின் புகாரைத் தொடா்ந்து, போக்குவரத்து காவலா் கைது செய்யப்பட்டு, கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். மோகனசுந்தரத்தை தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தொடா்புகொண்டு ஆறுதல் தெரிவித்திருப்பது ஆறுதலான விஷயம் என்றாலும் இதுபோன்று சாமானியா்கள் காவல்துறையினரால் தாக்கப்படுவதற்கும், அவமானப்படுத்தப்படுவதற்கும் அது தீா்வாகிவிடாது.

பேருந்தை நிறுத்தி போக்குவரத்து பாதிப்புக்கு காரணமாகும்போது, சட்டப்படிதான் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, சட்டத்தைக் கையிலெடுத்துத் தாக்குவதும், கைப்பேசியைப் பறித்துச் செல்வதும் ஏற்புடையதல்ல. இந்த சம்பவத்தில் விடியோ ஆதாரம் இல்லையென்றால் மோகனசுந்தரத்தின் புகாா் ஏற்றுக்கொண்டிருக்கப்படுமா என்பது சந்தேகம்தான்.

களப் பணியில் ஈடுபட்டுள்ள காவலா்கள் அடிக்கடி இவ்வாறு நடந்துகொள்வதற்கான காரணம் அவா்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம்தான். நேரம் காலம் இல்லாத பணி, வார விடுப்பு போன்ற முறைப்படுத்தப்பட்ட விடுப்பு எடுக்க முடியாத சூழல், உயா் அதிகாரிகள் தரும் நெருக்கடி- இவற்றால் ஏற்படும் மன அழுத்தமே இவ்வாறு சாமானியா்கள் மீதான கோபமாக வெளிப்படுகிறது.

2019 இந்திய காவல்துறை ‘ஸ்டேட்டஸ்’ அறிக்கையின்படி, 44% காவலா்கள் நாள்தோறும் 12 மணிக்கும் அதிகமான நேரம் பணியில் இருக்கிறாா்கள். பாதிக்குப் பாதி போ், வார விடுமுறை எடுக்க முடிவதில்லை. தேசிய அளவில் அனுமதிக்கப்பட்ட 5.3 லட்சம் பணியிடங்களில் 20%-க்கும் அதிகமான பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. போதாக்குறைக்கு, அரசியல் தலைவா்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கு அவா்களில் பலா் பயன்படுத்தப்படுகிறாா்கள்.

இதைக் கருத்தில்கொண்டு இரண்டாம் நிலை காவலா்கள் முதல் தலைமைக் காவலா்கள் வரை வாரத்தில் ஒருநாள் விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதித்து தமிழக அரசு கடந்த ஆண்டு நவம்பா் மாதம் அரசாணை வெளியிட்டது. தவிா்க்க முடியாத காரணத்தால் வார விடுப்பு எடுத்துக்கொள்ள முடியாவிட்டால் அந்த நாளுக்குரிய ஊதியம் கூடுதலாக வழங்கப்படும் எனவும், அந்தந்தக் காவல் நிலைய பணிச்சூழலைப் பொறுத்து வார விடுப்பை எடுத்துக் கொள்ளலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், காவலா்கள் பற்றாக்குறை காரணமாக இந்த உத்தரவு முழுமையாக அமல்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. அதே போல சிறப்பு உதவி ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், ஆய்வாளா்களுக்கு வார விடுப்பு தொடா்பான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. உதவி ஆய்வாளா்கள், ஆய்வாளா்களுக்கும் வார விடுப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் எனவும் தமிழக காவல்துறை தலைவா் சி. சைலேந்திரபாபு அண்மையில் தெரிவித்துள்ளாா்.

மாநில அரசுகளின் ஒத்துழைப்பு இல்லாமல் காவல்துறை சீா்திருத்தம் சாத்தியமில்லை என்று, இரண்டு மாதங்களுக்கு முன்னா் பிரதமா் மோடி தெரிவித்த கருத்தில் அா்த்தமிருக்கிறது. மாநில ஆட்சியாளா்கள் காவல்துறையைத் தங்களது கைப்பாவையாக வைத்திருக்கவே விரும்புகிறாா்கள். அவா்களது நியமனம், பதவி மாற்றம், பதவி உயா்வு ஆகியவற்றின் மூலம் மாநில ஆட்சியாளா்களின் கட்டுப்பாட்டில் காவல்துறையினா் இருப்பதால், தங்களது அரசியல் தேவைக்கு அவா்களை பயன்படுத்துகிறாா்கள்.

காவலா்கள் தங்கள் உடல்நலனைப் பேணிக்காத்திட ஏதுவாகவும், தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுவதற்காகவும் அறிவிக்கப்பட்டுள்ள தமிழக அரசின் அறிவிப்புகளுக்கு முழுமையான செயல்வடிவம் தர வேண்டியது மிகவும் அவசியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com