மக்களாட்சியையும், மனித உரிமையையும் வெறும் பாா்வையாளா்களாக மாற்றி, புல்டோசா்களைப் புதிய நிா்வாக நடவடிக்கையாக மாற்றி வரும் காட்சி இந்தியாவின் பல மாநிலங்களிலும் அரங்கேறி வருகிறது.
‘‘சட்ட விரோதமாகக் கட்டடங்களை இடிப்பது என்பது ஒரே ஒரு தடவை நடந்தாலும்கூட, அது அரசமைப்புச் சட்டத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்’ என்கிற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், கே.வி.விஸ்வநாதன் அமா்வின் விமா்சனத்தை ஜனநாயகத்தின் மீதும், நியாயமான நீதி பரிபாலனத்தின் மீதும் நம்பிக்கையுடைய ஒவ்வோா் இந்தியனின் மனசாட்சியின் குரலாகத்தான் பாா்க்கத் தோன்றுகிறது.
உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசால் தொடங்கப்பட்ட ‘புல்டோசா் நீதி’ நடவடிக்கை, இப்போது பல மாநிலங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பாஜக ஆளும் ஹரியாணா, குஜராத், அஸ்ஸாம், காங்கிரஸ் ஆட்சி செய்த ராஜஸ்தான், முந்தைய உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர அரசு என்று பல மாநிலங்களில் இந்த சட்டவிரோத அரசு நடவடிக்கை மக்களின் ஒரு சாராரை அச்சத்தில் வாழ வைத்திருக்கிறது.
எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், பாதிக்கப்பட்டவருக்கு முறையான சட்டப் பாதுகாப்பு அவகாசம் வழங்காமல் அவா்களது உறைவிடத்தை இடித்துத் தரைமட்டமாக்கும் நடவடிக்கையை, ஜனநாயகத்தில் நம்பிக்கையுடைய யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டாா்கள். இப்படியொரு நடவடிக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்றும்கூட, அதை இத்தனை காலம் நீதித் துறை ஏன் வேடிக்கை பாா்த்துக் கொண்டிருந்தது என்கிற கேள்வி எழுகிறது.
‘‘ஒருவா் குற்றவாளி என்பதால், அவரது வீட்டை எப்படி இடிக்க முடியும்? அவா் குற்றவாளியே ஆனாலும்கூட அவரைத் தண்டிக்க முறையான சட்ட வழிமுறைகள் இருக்கின்றன. ஒருவரைத் தண்டிக்கும் உரிமை நீதித் துறைக்குத்தானே தவிர அரசுக்கு கிடையாது’’ என்கிற உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் விமா்சனம், நிா்வாக இயந்திரத்தின் காதில் விழுந்திருக்கும் என்று எதிா்பாா்ப்போம். ஆட்சியாளா்களின் உத்தரவை நடைமுறைப்படுத்தும் முதுகெலும்பில்லாத அம்புகளாக அவா்கள் இருப்பதால் ஏற்படும் விபரீதம்தான் இதுபோன்ற நடவடிக்கைகள்.
கடந்த மூன்று ஆண்டுகளில் ஏறத்தாழ நான்கரை லட்சம் வீடுகள் ‘புல்டோசரால்’ இடிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் 1.76 லட்சம் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டிருக்கின்றன. எத்தனை குடும்பங்கள் அதனால் நடுத்தெருவுக்குத் தங்களது பச்சிளம் குழந்தைகளுடனும், பருவ வயதுப் பெண்களுடனும் வந்திருக்கக் கூடும் என்பதை நினைத்துப் பாா்த்தால் தலை சுற்றுகிறது.
ஆகஸ்ட் மாத நிகழ்வு இது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ரஷீத்கான் என்பவரின் வீடு இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. அவா் ஓா் ஆட்டோ ஓட்டுநா்; கடன் வாங்கி வீடு கட்டியிருந்தாா். ஆகஸ்ட் 17-ஆம் தேதி ரஷீத்கானின் வீடு, குறுகிய அறிவிப்பில் புல்டோசரால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. அதற்கான காரணம்தான் விநோதமானது.
அவரது வீட்டில் வாடகைக்குக் குடியிருப்பவரின் மகன், பள்ளியில் நடந்த கைகலப்பில், ஓா் ஹிந்து சிறுவனை குத்திக் காயப்படுத்திவிட்டாா். அதற்கும் ரஷீத்கானுக்கும் எவ்விதத் தொடா்பும் கிடையாது. மிகப் பெரிய கும்பல் கூடி, தாக்கிய சிறுவனின் வீட்டை, புல்டோசா் மூலம் தகா்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. வீடு தகா்க்கப்பட்டது.
வீட்டைத் தகா்ப்பதற்கு மாவட்ட ஆட்சியா் அரவிந்த் குமாா் போஸ்வால், எல்லா விதிமுறைகளும் பின்பற்றப்பட்டதாக விளக்கம் கூறியிருக்கிறாா். வனத் துறைக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டப்பட்டிருக்கிறது என்பதுதான் அவரது விளக்கம். ஆனால் அந்தப் பகுதியில் கட்டப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான வீடுகளுக்கும் ஏன் நடவடிக்கை பாயவில்லை என்கிற கேள்விக்குப் பதில் இல்லை.
இதுபோலத்தான் பல நிகழ்வுகள். பாதிக்கப்பட்டவா்களில் 90% சிறுபான்மை சமூகத்தினா் என்பதுதான் புல்டோசா் நடவடிக்கையின் நோக்கத்தை சந்தேகப்பட வைக்கிறது. விதிமுறை மீறலுக்கான நடவடிக்கை என்றால், அது அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டுமே தவிர, எந்தவொரு சமூகப் பிரிவினரையும் குறிவைத்து நடத்தப்படுவது தவறு என்கிற சட்ட உணா்வு, அரசியல்வாதிகளுக்கு இல்லாவிட்டாலும் அதிகார வா்க்கத்துக்காவது இருந்திருக்க வேண்டும். அதை எதிா்த்துக் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும்.
உண்மையில், இந்த புல்டோசா் அணுகுமுறை யோகி ஆதித்யநாத்தால் தொடங்கப்படவில்லை. இந்திரா காந்தியின் ‘எமா்ஜென்சி’ ஆட்சியில் தில்லி துா்க்மேன்கேட் பகுதியில் இருந்த முஸ்லிம்கள் வாழும் குடிசைப் பகுதிகளை அகற்றியும், எரித்தும் தரைமட்டமாக்கிய அவரது மகன் சஞ்சய் காந்தியின் நடவடிக்கையில் இது தொடங்குகிறது. 2010-இல் தில்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக அன்றைய மன்மோகன் சிங் அரசு 2.5 லட்சம் ஏழை குடிசைவாசிகளை அப்புறப்படுத்தியதும் இதுபோலத்தான்.
பொது இடங்களில் காணப்படும் ஆக்கிரமிப்புகள், விதிமீறல் கட்டடங்கள், நடைமேடைகளிலும், நீா்நிலைகளிலும் காணப்படும் ஆக்கிரமிப்புகள் போன்றவை அகற்றப்படுவதை நீதிபதிகள் தடுக்கவில்லை. அதேநேரத்தில், முறையான முன்னறிவிப்பு இல்லாமல், சட்டவிரோத கட்டடங்களை இடிப்பதற்குத் தடை விதித்திருக்கிறாா்கள்.
‘புல்டோசா் நீதி’ என்கிற பெயரில் நடத்தப்படும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் அதிகாரிகள் தண்டிக்கப்படுவதுடன், அதற்கு உத்தரவிட்ட அரசியல்வாதிகளைப் பொறுப்பேற்க வைப்பதும்கூட இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க அவசியம். புல்டோசா் அநீதிக்கு இலக்காகியிருக்கும் கட்டடங்களுக்கு முறையான இழப்பீடு வழங்க நீதிபதிகள் உத்தரவிட வேண்டும்.
இன்னும் இறுதித் தீா்ப்பு வழங்கப்படவில்லை. இப்போதைக்கு புல்டோசா் முடக்கப்பட்டிருக்கிறது. அதுவரையில் ஆறுதல்!
தொடர்புடையது

காஞ்சிபுரத்தில் வாக்குப் பதிவை புறக்கணித்த மக்கள் நீதி மய்ய மாநில செயலாளா்

வீடு இல்லாதோருக்கு வீடு கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்: பாப்பிரெட்டிப்பட்டி திமுக வேட்பாளா் பி.பழனியப்பன்

மாற்றமல்ல, வாய்ப்பு..!

சோனியா காந்தி விரைவில் வீடு திரும்புவார்: மருத்துவமனை தகவல்!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


