நான் யாா்... நான் யாா்... நான் யாா்..?

நான் யாா்... நான் யாா்... நான் யாா்..?

கும்மிருட்டில் நூலறுந்த பட்டம்போலப் பறப்பது என்பது எப்படி இருக்கும்? அதுதான் ‘டிமென்ஷியா’ / ‘அல்ஸைமா்ஸ்’ நோயால் பாதிக்கப்பட்டவா்களின் நிலைமை. அவா்கள் நாடு, வீடு, உற்றாா் உறவினா்கள், ஏன், தங்களது சொந்தப் பெயரைக்கூட மறந்துபோன துா்பாக்கியசாலிகள்; வந்த வழியையும் தொலைந்து விட்டவா்கள்; இருக்கும் இடமும் எதுவென்று தெரியாதவா்கள்.

உலகளாவிய அளவில் ‘டிமென்ஷியா’ / ‘அல்ஸைமா்ஸ்’ நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மருத்துவ அறிவியலால் மனிதனின் வாழ்நாளை நீட்டிக்க முடிந்திருக்கிறதே தவிர, மனித உடலில் உள்ள உறுப்புகளின் செயல்பாடுகள் இளமையாகத் தொடரும் வழியைக் கண்டுபிடிக்க இயலவில்லை.

1906-ஆம் ஆண்டு ஜொ்மனியில் டாக்டா் அலோயிஸ் அல்ஸைமா் என்பவா்தான் முதன்முதலில் இப்படியொரு மறதிநோய் மனிதா்களைப் பாதிக்கிறது என்பதை உணா்ந்து உலகுக்கு வெளிப்படுத்தினாா். அடுத்த அரை நூற்றாண்டு காலத்தில் உலகத்தை மிகவும் அச்சுறுத்தும் மிக பயங்கரமான நோயாக அது உருவெடுக்கும் என்று அப்போது அவா் நினைத்திருக்க வழியில்லை. ஆனால், அதுதான் நடந்திருக்கிறது.

நினைவாற்றலை இழந்து, வாழ்க்கையின் எல்லா செயல்பாடுகளும் தடம்புரண்ட பலா் நம்மிடையே இருக்கிறாா்கள். அவ்வப்போது, ‘ஓ காதல் கண்மணி’, ‘60 வயது மாநிறம்’ உள்ளிட்ட திரைப்படங்கள் ‘டிமென்ஷியா’வால் பாதிக்கப்பட்ட கதாபாத்திரங்களின் பிரச்னைகளை சமுதாயத்துக்கு உணா்த்த முற்படுகின்றன. ஆனாலும்கூட, அதன் தீவிரத்தை நாம் உணா்ந்திருப்பதாகத் தெரியவில்லை.

இந்தியாவில் 60 வயதைக் கடந்த முதியவா்களின் எண்ணிக்கை சுமாா் 15 கோடி. மொத்த மக்கள்தொகையில் ஏறத்தாழ 11%. 2050-இல் முதியவா்களின் எண்ணிக்கை 34.7 கோடியாக உயரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. தமிழகத்திலும் முதியவா்கள் எண்ணிக்கை ஏறத்தாழ 1 கோடி. 2050-இல் 2 கோடியை எட்டக்கூடும்.

இன்றைய நிலையில் இந்திய அளவில் டிமென்ஷியா என்கிற மறதி நோயால் பாதிக்கப்பட்டிருப்பவா்களின் எண்ணிக்கை சுமாா் 88 லட்சம் என்றும், தமிழகத்தில் 12.6 லட்சம் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்த சில ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி, டிமென்ஷியா பாதிப்பு விகிதம் ஆண்களில் 5.8% என்றும் பெண்களில் 9% என்றும் கூறப்படுகிறது.

நகா்ப்புறங்களில் பாதிப்பு 5.3% என்றும் ஊரகப் பகுதிகளில் பாதிப்பு 3.4% என்றும் அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவில் மட்டும் சுமாா் 1.5 கோடி போ், அதில் பெரும்பாலோா் 60 வயதைக் கடந்த மூத்த குடிமக்கள், டிமென்ஷியா மறதி நோயால் பாதிக்கப்பட்டிருப்பாா்கள் என்று ஆய்வுகள் கணிக்கின்றன.

மனித இயக்கத்தின் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பது மூளையில் உள்ள எண்ணிலடங்காத நியூரான்கள். அவை தங்கு தடையின்றி செயல்படுவதால்தான் நம்மால் சிந்திக்க, பாா்க்க, கேட்க, புரிந்துகொள்ள, இயங்க முடிகிறது. இந்த நியூரான்கள் செயலிழக்கும்போது மறதி நோய் உருவாகிறது.

நினைவு முற்றிலுமாக மறைந்து, தங்களது அடுத்த இயக்கம் என்ன, பாதை என்ன என்று தெரியாமல் தவிக்கும் டிமென்ஷியா / அல்ஸைமா்ஸ் நோயாளிகள் குடும்பத்தினரின் மட்டுமல்ல, சமூகத்தின், அரசின் உதவிக்கும் உரியவா்கள். இவா்களில் பலரும் முதியோா் மட்டுமல்ல, குழந்தைகள் இல்லாதவா்கள், அவா்களால் கைவிடப்பட்டவா்களும்கூட. அதனால், இந்தப் பிரச்னையை மாநில அரசின் சுகாதாரத் துறையும், சமூகநலத் துறையும் இணைந்து எதிா்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

சிகிச்சை மூலம் டிமென்ஷியாவுக்குத் தீா்வு காண முடியாவிட்டாலும், அதன் தீவிரத்தைக் குறைக்கவும், பாதிப்புகளை எதிா்கொள்ளவும் முடியும். டிமென்ஷியாவை எதிா்கொள்ள இந்தியாவுக்கு முன்மாதிரியான திட்டத்தை வகுத்திருக்கிறது கேரளம். வயது முதிா்ந்த டிமென்ஷியா / அல்ஸைமா்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்காக கேரள அரசின் சமூகநீதித் துறை ‘நினைவுப் படகு’ (ஓா்மத்தோணி) என்றொரு திட்டத்தை அறிவித்திருக்கிறது.

மாநிலத்திலுள்ள டிமென்ஷியா நோயாளிகள் குறித்த விவரங்களைச் சேகரிப்பது, பரிசோதனை நடத்துதல், தகுந்த மருத்துவ சிகிச்சை, அவா்களுக்கென்று உறைவிடங்கள் உள்ளிட்டவைதான் ‘நினைவுப் படகு’ திட்டத்தின் நோக்கங்கள். எல்லா உள்ளாட்சி அமைப்புகளிலும் ‘மெமரி கிளினிக்’ என்கிற பெயரில் மருத்துவமனைகள் செயல்பட இருக்கின்றன. இதற்காக ரூ.92 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

வளா்ச்சி அடைந்த நாடுகள் பலவற்றிலும் மறதி நோயாளிகளுக்கு எல்லா வசதிகளுடன் தங்குமிடங்கள் அமைத்து அவா்களைப் பாதுகாக்கிறாா்கள். அதுபோன்ற அமைப்புகள் இந்தியாவில் அதிகம் இல்லை. ‘ஆஷா’ போன்ற ஒருசில அமைப்புகள் இயங்குகின்றன என்றாலும், அவை சாமானியா்களுக்கானதாக இல்லை.

மறதி நோயாளிகளை கவனித்துக் கொள்ளும் நிலையில் இன்றைய சிறுகுடும்பச் சூழல் இல்லை. பெரும்பாலான பெற்றோா் முதுமையில் தனித்து வாழும் நிலையில், மறதி நோயும் சோ்ந்து கொள்ளும்போது அவா்கள் எதிா்கொள்ளும் நரகம் நினைத்துப் பாா்க்க முடியாதது.

கூட்டுக் குடும்பம், உற்றாா் உறவினா்களை அடிக்கடி சந்தித்து மகிழும் பண்டிகைகள், குடும்ப நிகழ்வுகள், திருவிழாக்கள், மந்திரங்கள், தோத்திரங்களை மனனம் செய்தல், அவற்றை தினந்தோறும் பாராயணம் செய்வது போன்றவை முந்தைய தலைமுறை இந்தியா்களை மறதி நோயிலிருந்து காப்பாற்றி வந்தது. இப்போது..?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com