இந்த ஐபிஎல் போட்டி தொடங்கப்பட்டதில் இருந்து பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றே கூற வேண்டும். அதிகம் அறியப்படாத இளம் ஆட்டக்காரர்களுக்கு இது நல்ல களமாக அமைகிறது. சர்வதேச ஆட்டக்காரர்களுடன் விளையாடும் அனுபவத்தை அளிக்கிறது. ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடியதன் காரணமாகவே ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, யுஜவேந்திர சஹல், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், நிதிஷ் குமார் ரெட்டி உள்ளிட்டோர் இந்திய அணியில் இடம்பிடித்தனர். ஐபிஎல் காரணமாகவே ஆஷிஷ் நெஹரா 36 வயதிலும், தினேஷ் கார்த்திக் 37 வயதிலும் மீண்டும் இந்திய அணியில் இடம்பெறும் வாய்ப்பு கிடைத்தது.