தஞ்சாவூர், ஜூலை 13: தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் கடந்த 18 ஆண்டுகளாக காலியாக உள்ள முழுநேர இயக்குநர் பணியிடத்தை நிரப்புவது தொடர்பாக, சட்டப்பேரவையில் புதன்கிழமை (ஜூலை 15) நடைபெறும் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சுமார் 450 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததது தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகம். இந்தியாவில் உள்ள நூலகங்களில் மிகவும் பழைமையான இந்த நூலகத்தில் தமிழில் 3,817, சம்ஸ்கிருதத்தில் 25,560, தெலுங்கில் 1,045, மராட்டியத்தில் 3,080 ஏட்டுச் சுவடிகளும், 21,041 காகிதச் சுவடிகளும், மன்னர் சரபோஜி சேகரித்த பன்னாட்டு அச்சு நூல்களான கிரீக், லத்தீன், ஜெர்மன், பிரெஞ்ச், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 4,500-க்கும் அதிகமான நூல்களும், அரிய வண்ணப் படங்களின் தொகுப்புகளும், தற்காலத்திய அச்சு நூல்களாக பல்வேறு மொழிகளில் அமைந்த 65,000 நூல்களும் உள்ளன.
தமிழ், தெலுங்கு, மராட்டி, மோடி ஆகிய துறை வல்லுநர்கள் பணியிடம் மட்டுமன்றி, காப்பாட்சியர், சுவடிகள் பாதுகாப்பாளர், பதிப்பு மேலாளர் உள்ளிட்ட பெரும்பாலான பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளதால், பல்வேறு நிர்வாகப் பணிகள் மெத்தனமாகவே நடைபெறுகின்றன.
நூலகத்தில் இன்னும் ஏராளமான சுவடிகள் மொழிபெயர்க்கப்படாமல் உள்ளன. காலிப் பணியிடங்களை நிரப்புவதுடன், மொழிபெயர்ப்புப் பணிகள் நடைபெற்று நூல்கள் வெளிவந்தால் பலருக்கு ஆய்வு நூலாகப் பயன்படுவதுடன், பல புதிய தகவல்களையும், வரலாற்று நிகழ்வுகளையும் அறிந்து கொள்ள முடியும்.
தஞ்சாவூரில் கடந்த ஜூலை 1-ம் தேதி செய்தியாளர்களிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசிய போது, "இந்த நூலகத்தில் காலியாக உள்ள முழுநேர இயக்குநர் பணியிடத்தை நிரப்புவது தொடர்பாக முதல்வர் கருணாநிதியின் கவனத்துக்குக் கொண்டு செல்வேன் என்றும், சட்டப்பேரவைக் கூட்டத் தொடருக்கு முன்பு அல்லது ஜூலை மாத இறுதிக்குள் இந்தப் பணியிடம் நிரப்பப்படும்' என்றும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.