இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. வேறு படிப்புகளில் சேர்ந்த "பழைய' பிளஸ் டூ மாணவர்கள் இதைச் சாதகமாக்கிக் கொண்டு, எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரத் தொடங்கினர். இவ்வாறு "பழைய' மாணவர்களை எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ப்பதற்கு 2007-ம் ஆண்டு பிளஸ் டூ மாணவர்கள் ஆட்சேபம் தெரிவித்து உச்ச நீதிமன்றம் சென்றனர். ஆனால், மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தின் தகவல் குறிப்பேட்டில், "பழைய' மாணவர்கள் சேருவதற்கான தகுதி வாசகங்களைச் சுட்டிக்காட்டியும், அனைவருக்கும் விரும்பியதைப் படிக்க உரிமை உள்ளது எனக் கூறியும் "பழைய' மாணவர்களுக்குச் சாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.