டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

23 முதுகலை பட்டம் முடித்துள்ள சாதனையாளர்

சென்னை, ஜூன் 17: பல படிப்புகளைப் படித்து பட்டங்களைப் பெறுவதைப் பொழுதுபோக்காகக் கொண்டுள்ளார் சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த வி.என்.பார்த்திபன் (50) என்பவர்.  ""உலகிலேயே அதிக பட்டங்களைப் பெற்றவன் என்று க

Updated On :20 செப்டம்பர் 2012, 2:41 am

சென்னை, ஜூன் 17: பல படிப்புகளைப் படித்து பட்டங்களைப் பெறுவதைப் பொழுதுபோக்காகக் கொண்டுள்ளார் சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த வி.என்.பார்த்திபன் (50) என்பவர்.

 ""உலகிலேயே அதிக பட்டங்களைப் பெற்றவன் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிப்பதே என் லட்சியம். இதற்காக ஆயுள் முழுதும் படித்துக்கொண்டே இருப்பேன்'' என்கிறார் அவர்.

 இவர் ராயபுரத்தில் உள்ள கே.சி.எஸ்.சங்கரலிங்க நாடார் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தனது பட்டப் படிப்பை மேற்கொண்டார்.

 பின்னர் 1985-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் உதவியாளர் பணியில் தனது வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார். இந்தப் பணியில் இருந்துகொண்டே சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் பி.ஜி.எல். சட்டப் படிப்பை பகுதி நேர படிப்பாக மேற்கொண்டார். 1988-ல் அப்படிப்பை முடித்துள்ளார். வங்கி ஊழியரான செல்வகுமாரியை மணம் செய்துகொண்டதும் அந்த ஆண்டுதான்.

 பின்னர் லயோலா மேலாண்மை கல்வி நிறுவனத்தில் (லிபா) எம்.பி.ஏ. படிப்பை மேற்கொண்டார்.

 உயர் அதிகாரிகள் அளித்த நெருக்கடி காரணமாக அரசு வேலையை உதறிவிட்டு, முழு நேரம் படிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

 எம்.பி.ஏ. முடித்த பின்னர் சென்னை டி.ஜி. வைஷ்ணவ கல்லூரியில் எம்.ஃபில். வணிகப் பிரிவில் முழு நேர மாணவராகச் சேர்ந்து படித்துள்ளார்.

 குடும்ப வருமானத்துக்காக வடிவாம்பாள் என்ற பெயரில் தனியார் டியூஷன் மையத்தை ஆரம்பித்து, ஏழை மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் கல்வி கற்பித்து வந்தார். கல்லூரி ஆசிரியர், விரிவுரையாளர் பணிக்காக மாநில அளவிலும்,மத்திய அளவிலும் நடத்தப்படும் "ஸ்லெட், நெட்' தகுதித் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.

 2000-ம் ஆண்டில் சென்னை மயிலாப்பூரில் ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்ததும், தனியார் டியூஷன் கற்பிப்பதை நிறுத்திவிட்டார்.

 50-க்கும் மேற்பட்ட பட்டங்கள்...

 மருத்துவம், பொறியியல் படிப்புகளைத் தவிர மற்ற அனைத்து பட்ட மேற்படிப்புகளிலும் பட்டம் மற்றும் பட்டயங்களை பெற்று நடமாடும் பல்கலைக்கழகமாக பார்த்திபன் மாறியுள்ளார் என்றுதான் கூறவேண்டும்.

 உளவியல், பொது நிர்வாகம், எம்.காம். சந்தையியல், எம்.சி.எஸ்., எம்.காம். கூட்டுறவு மேலாண்மை, மூலதன மேலாண்மை என்பன உள்ளிட்ட கலை அறிவியல் படிப்புகளில் 23 பட்ட மேற்படிப்புகளை முடித்துள்ளார்.

 எம்.பி.ஏ., பட்டங்கள்: பாரதியார் பல்கலைக்கழகம், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், புதுவை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் மூலம் 8 துறைகளின் கீழ் மேலாண்மை பட்ட மேற்படிப்புகளை முடித்துள்ளார்.

 சட்ட மேற்படிப்புகள்: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்கள் மூலம் 9 துறைகளின் கீழ் எம்.எல். மற்றும் சட்ட மேற்படிப்புகளை முடித்துள்ளார்.

 எம்.ஃபில்., பிஎச்.டி: வணிகம், பொருளாதாரம், மேலாண்மை, அரசியல் அறிவியல், சமூகவியல், பொது நிர்வாகம், சமூகப் பணி, சர்வதேச வணிகம், தொழிலாளர் கல்விகள் உள்ளிட்ட 10 துறைகளின் கீழ் எம்.ஃபில். படிப்புகளை முடித்துள்ளார்.

 ஐ.சி.டபிள்யு.ஏ.ஐ., ஐ.சி.எஸ்.ஐ., என்.ஐ.பி.எம்., சி.ஐ.ஐ., தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் மூலம் 20-க்கும் மேற்பட்ட முதுநிலை பட்டயப் படிப்புகளை முடித்துள்ளார் இவர்.

 இரண்டு துறைகளின் கீழ் ஆராய்ச்சி படிப்புகளையும் (பிஎச்.டி) விரைவில் முடிக்க உள்ளார்.

 படிப்பதற்காக வீட்டின் மொட்டை மாடியில் தனி அறை ஒன்றை இவர் அமைத்துள்ளார். அங்கு ஆயிரக்கணக்கான புத்தகங்கள் நிறைந்து காணப்படுகின்றன. படித்து முடித்த புத்தகங்களை மட்டும் தனியாக 8 அலமாரிகளில் அடுக்கி வைத்துள்ளார்.

 7 கல்வி நிறுவனங்களில் பகுதி நேர ஆசிரியர்: விவேகானந்தா கல்லூரியில் தனது முழு நேர விரிவுரையாளர் பணி முடிந்த பின்னர், சென்னை பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழக கல்வி மையம், மெட்ராஸ் சமூகப் பணி கல்வி நிறுவனம் உள்ளிட்ட 7 கல்வி நிறுவனங்களில் பகுதி நேர சிறப்பு விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.

 தினமும் காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பும் பார்த்திபன் இரவு 10 மணிக்குத்தான் வீடு திரும்புகிறார்.

 சாதனை குறித்து பார்த்திபன் கூறியது:

 100 பட்டங்களைப் பெறுவதே எனது வாழ்வின் லட்சியம். எனது ஊதியம் முழுவதையும் படிப்புக்காக செலவழித்து வருகிறேன். மனைவிதான் குடும்பச் செலவுகளை கவனித்துக் கொள்கிறார். ஓய்வு பெற்றாலும் ஏழை மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்கும் பணியைத் தொடருவேன் என்கிறார் அவர்.

 இவருக்கு தியாகராஜன் என்ற மகனும், உதயராணி என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் பொறியியல் பட்டப் படிப்பு படித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.