மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் செருப்பு மாலை அணிந்தபடி பிரசாரம் மேற்கொள்ளும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மொத்தம் 80 மக்களவைத் தொகுதிகளை கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் வருகின்ற 19-ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இதில், இரண்டாம் கட்டத்தில் அலிகார் மக்களவைத் தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இந்த தொகுதியில் பாஜக, இந்தியா கூட்டணி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவும் நிலையில், சுயேச்சைகளும் களத்தில் இறங்கியுள்ளனர்.
அதில், பண்டித் கேஷவ் தேவ் என்பவரும் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். அவருக்கு ‘செருப்பை’ சின்னமாக இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
இந்த நிலையில், 7 செருப்புகளை கோர்த்து மாலையாக அணிந்து வேட்புமனு தாக்கல் செய்த கேஷவ், பிரசாரத்தின் போதும் செருப்பு மாலையுடன் காணப்படுகிறார்.
மக்களை ஈர்ப்பதற்காகவும், சின்னத்தை பிரபலப்படுத்துவதற்காகவும் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவர் செருப்பு மாலையுடன் நகர் முழுவதும் பிரசாரம் செய்யும் காட்சிகள் வாக்காளர்களின் கவனத்தை பெற்றதுடன் இணையத்திலும் வைரலாகி வருகின்றது.
ஏற்கெனவே, கடந்த உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலின்போதும் அலிகார் சட்டப்பேரவைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டபோது ஷூ மாலை அணிந்து பிரசாரம் மேற்கொண்டிருந்தார்.
அலிகார் தொகுதியில் 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சதீஷ் குமார் கெளதம் 6.5 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பகுஜன் சமாஜ் வேட்பாளர் அஜீத் பலியான் 4.2 லட்சம் வாக்குகள் பெற்று இரண்டாமிடம் பிடித்தார்.