

காசர்கோட்டில் மாதிரி வாக்குப்பதிவின் போது ஒரு முறை தாமரை சின்னத்தை அழுத்தினால் இரண்டு வாக்குகள் பதிவானதால் எதிர்க்கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காசர்கோடு மக்களவைத் தொகுதிக்கு பயன்படுத்தப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சிகளின் பிரமுகர்களின் முன்னிலையில் நேற்று தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் மாதிரி வாக்குப்பதிவு நடத்தி காண்பிக்கப்பட்டது.
ஒவ்வொரு வாக்குப் பதிவு இயந்திரத்திலும் நோட்டாவை சேர்த்து மொத்தம் 10 சின்னங்கள் பொருத்தப்பட்டிருந்தது. முதல்கட்டமாக 20 இயந்திரங்களில் உள்ள 10 சின்னங்களையும் அழுத்தி அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.
அதன் விவிபேட் சீட்டை எடுத்து பார்த்ததில், பாஜகவுக்கு 2 வாக்குகள் விழுந்திருப்பது தெரியவந்துள்ளது. மொத்தம் 4 வாக்குப் பதிவு இயந்திரங்களில் இதுபோன்று பாஜகவுக்கு இரு வாக்குகள் விழுந்துள்ளது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் இயந்திரங்களை மாற்றக் கோரி புகார் அளித்துள்ளனர்.
மேலும், காங்கிரஸ் தரப்பில் மற்ற கட்சிகளின் சின்னத்தைவிட கை சின்னம் சிறியதாக இருப்பதாகவும் முறையிட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தை விவிபேட் ஒப்புகைச் சீட்டை 100 சதவிகிதம் எண்ணக் கோரிய வழக்கு விசாரணையின்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் நீதிபதிகள் முன்னிலையில் வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, காசர்கோடு விவகாரத்தை உடனடியாக விசாரிக்கக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.