காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.
மக்களவைத் தேர்தலையொட்டி சத்தீஸ்கர் மாநிலம் சுர்குஜா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஊழல்வாதிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு நாடே சாட்சியாக உள்ளது. காங்கிரஸின் மோசமான ஆட்சியும், அலட்சியமும்தான் நாட்டின் அழிவுக்கு காரணம்.
இன்று, பயங்கரவாதம் மற்றும் நக்சல்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை பாஜக எடுத்து வருகின்றது. ஆனால், வன்முறை பரப்புபவர்களை காங்கிரஸ் ஆதரிப்பதுடன், அவர்களை துணிச்சலானவர்கள் என்று அழைக்கிறது. பயங்கரவாதிகள் கொல்லப்படுவதற்கு காங்கிரஸின் மிகப்பெரிய தலைவர் கண்ணீர் விடுகிறார். இதுபோன்ற செயல்களால் நாட்டின் நம்பிக்கையை காங்கிரஸ் இழந்துள்ளது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியானபோதே முஸ்லிம் லீக் போன்று இருப்பதாக கூறியிருந்தேன். இந்தியாவில் மத அடிப்படையிலான இடஒதுக்கீடு கிடையாது என்று அம்பேத்கர் தலைமையிலான அரசியலமைப்பு குழு முடிவெடுத்திருந்தது
ஆனால், வாக்குக்காக மாபெரும் தலைவர் அம்பேத்கரின் வார்த்தைகளை காங்கிரஸ் உதாசினப்படுத்தியது. சில ஆண்டுகளுக்கு முன்பு, ஆந்திரத்தில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை கொண்டு வர காங்கிரஸ் முயற்சித்தது. தற்போது அதனை நாடு முழுவதும் அமல்படுத்த நினைக்கிறது. எஸ்சி/எஸ்.டி மற்றும் ஓபிசிக்கு ஒதுக்கப்படும் பகுதிகளை மத அடிப்படையில் சில பிரிவுகளுக்கு வழங்க காங்கிரஸ் முயற்சிக்கிறது.” என்று பேசினார்.
கடந்த வாரம் ராஜஸ்தான் மாநிலன் பன்ஸ்வாராவில் நடந்த பாஜக கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், தாங்கள் மத்தியில் ஆட்சிக்கு வந்தால், நாட்டில் உள்ள தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் தங்க நகைகளையும், குடும்பத்தினரின் சொத்து மதிப்புகளையும் பங்கிட்டு அதனை முஸ்லிம்களுக்கு மறுபகிர்வு செய்வார்கள் என்று பேசியது விமர்சனத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.