தேர்தல் வந்தாலே ஊடகங்கள் கருத்துக் கணிப்பு நடத்துவது வாடிக்கையாகிவிட்டது. உண்மையில், கருத்துக் கணிப்பு என்பது புள்ளியியல் சார்ந்த அறிவியல்பூர்வமான ஆய்வு முறையாகும்.
தேர்தலில் கருத்துக் கணிப்பு வெளியிடுவது என்ற வழக்கம், 1824-இல் அமெரிரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத் தேர்தலில் துவங்கியது. அத்தேர்தலுக்கு முன்னர் மக்களிடம் நடத்திய கருத்துக் கணிப்புகள் தேர்தலில் முழுமையாக எதிùராலித்தன; அதையடுத்து, தேர்தல் முறையின் ஓர் அங்கமாக அவை மாறத் தொடங்கின.
ஒரு குறிப்பிட்ட விஷயத்துக்காக மக்களின் கருத்தை அறிவது வர்த்தகம், அரசியல், அரசு நிர்வாகத்தில் பெரும் பயன்களை அளிக்கும். புள்ளியியல் முறையில் மாதிரி (சாம்பிள்) அளவுகள் முக்கியமானவை. அந்த மாதிரிகள் பெறப்படும் இடங்களும் பரந்துபட்டதாக இருக்க வேண்டும்.
மக்களிடம் நேரடி சந்திப்பு, படிவம் மூலமாகக் கருத்தறிதல், இணையம் மூலமாக மாதிரித் தேர்தல்களை நடத்துதல் போன்றவை மூலமாக தரவுகள் சேகரிக்கப்பட வேண்டும். அந்த மாதிரி சேகரிப்பில் கிடைக்கும் தரவுகளை, உள்நோக்கமின்றி, நடுநிலைமையுடன் ஆய்வு செய்தால் மட்டுமே நியாயமான முடிவுகள் கிடைக்கும்.
இந்தத் தரவுகளைப் பெறவும், ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்த பல்வேறு கேள்விகளை எழுப்பும் முறை உள்ளது. இதற்கான தனிப் படிவமும் பயன்படுத்தப்படலாம். இந்தக் கேள்விகள் ஒருபோதும் ஒருசார்பாக இருத்தல் கூடாது.
ஆனால், காலப்போக்கில் அரசியல் களத்தை மாற்றி அமைக்கும் வல்லமை கொண்டவையாக தேர்தல் கருத்துக் கணிப்புகள் மாறியபோது, லாபம் கொழிக்கும் வர்த்தகமாக அரசியல் மாறியபோது, கணிப்புகளை மேற்காாள்வோரும் தடம்புரள ஆரம்பித்தனர். அதனால் கருத்துக் கணிப்புகள், கருத்துத் திணிப்புகளாக மாறி, அவற்றின் நம்பகத்தன்மையை இழக்கத் துவங்கின.
2011 பேரவைத் தேர்தல் அனுபவம்: இதற்கு தமிழகத்திலேயே பல உதாரணங்களைக் காண இயலும். குறிப்பாக, 2011, 2016 -ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது நடத்தப்பட்ட தேர்தல் கருத்துக் கணிப்புகளின் பட்டியல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை மேலோட்டமாகப் பார்த்தாலே, கருத்துக் கணிப்புகளின் மாயை புலப்படும்.
2011-ஆம் ஆண்டில் அப்போதைய ஆளும் கட்சியான திமுகவை எதிர்த்து அதிமுக தலைமையில் ஜெயலலிதா வலிமையான கூட்டணியை உருவாக்கி இருந்தார். தேமுதிக, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம், மூவேந்தர் முன்னேற்ற முன்னணி, ஃபார்வர்டு பிளாக், இந்திய குடியரசுக் கட்சி, கொங்கு இளைஞர் பேரவை ஆகிய 10 கட்சிகளுடன் அதிமுக கூட்டணி கண்டது.
எதிரணியில் காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள், கொங்கு முன்னேற்றக் கழகம், இ.யூ.முஸ்லிம் லீக், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகிய 7 கட்சிகளுடன் திமுக கூட்டணி அமைத்திருந்தது.
கூட்டணி வலிமை மட்டுமல்லாது, ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலையை அறுவடை செய்யும் சாதகமான போக்கும் அதிமுகவுக்கே இருந்தது. ஆனால் அப்போது நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகள் ஒன்றும்கூட தேர்தலுக்குப் பிந்தைய உண்மை நிலவரத்துடன் ஒத்துப்போகவில்லை.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள 9 கணிப்புகளில் 3 கணிப்புகள் திமுக அணிக்கே வெற்றி வாய்ப்பு இருப்பதாகக் கூறியிருந்தன. மீதமுள்ள 6 கணிப்புகள் அதிமுக அணி வெல்லும் என்று கூறியபோதும், மக்களின் மனநிலையை முழுமையாக வெளிப்படுத்தவில்லை.
அந்தத் தேர்தலில் 234 மொத்தத் தொகுதிகளில் அதிமுக அணி 203 தொகுதிகளிலும் திமுக அணி 31 தொகுதிகளிலும் வென்றன. இந்த மாபெரும் வெற்றிக்கான மக்களின் மனநிலையை எந்தக் கருத்துக் கணிப்பும் பிரதிபலிக்கவில்லை.
2016 பேரவைத் தேர்தல் அனுபவம்: இதேபோலத்தான் 2016 பேரவைத் தேர்தல் கணிப்புகளும் காணப்படுகின்றன. 2011 முதல் ஆட்சியிலிருந்த அதிமுக அரசுக்கு எதிராக அதிருப்தி மக்களிடம் இருந்தபோதும், அதை தனக்குச் சாதகமாக்க திமுகவால் இயலவில்லை. அதற்கு கருத்துக் கணிப்புகள் தந்த மாயையான தெம்பும் ஒரு காரணம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இத்தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு எதிராக வலுவான கூட்டணியை திமுக அமைத்திருந்தது. காங்கிரஸ், இ.யூ.முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, விவசாயிகள்- தொழிலாளர்கள் கட்சி, சமூக சமத்துவப் படை, மக்கள் தேமுதிக ஆகிய 8 கட்சிகளுடன் திமுக கூட்டணி அமைத்தது.
ஆளும் தரப்பில், மனிதநேய ஜனநாயகக் கட்சி, தமிழ் மாநில முஸ்லிம் லீக், இந்திய தவ்ஹீத் ஜமாத், இந்திய குடியரசு கட்சி, கொங்கு பேரவை, சமத்துவ மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கழகம், முக்குலத்தோர் புலிப்படை ஆகிய 8 சிறு கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்திருந்தது.
இத்தேர்தலின் திருப்புமுனை, தேமுதிக தலைமையில் அமைந்த மூன்றாவது அணியாகும். தேமுதிக, மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தமாகா, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய 6 கட்சிகள் இணைந்து மக்கள்நலக் கூட்டணியாகப் போட்டியிட்டன. இதுவே திமுக ஆட்சியைப் பிடிக்க இயலாமல் தடுத்த நிகழ்வு.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள 2016 தேர்தல் கருத்துக் கணிப்புகளைப் பார்த்தால், மூன்றாவது அணிக்கு எந்த மதிப்பும் அளிக்கப்படவில்லை என்பது புலப்படும். இங்கு கொடுக்கப்பட்டுள்ள 9 கருத்துக் கணிப்புகளில் 6 கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக உள்ளன; அதிமுகவுக்கு சாதகமாக இரு கணிப்புகள் மட்டுமே உள்ளன.
அந்தத் தேர்தலில் 234 மொத்தத் தொகுதிகளில் அதிமுக அணி 134 தொகுதிகளிலும் திமுக அணி 98 தொகுதிகளிலும் வென்றன. மக்கள் நலக் கூட்டணி பல தொகுதிகளில் குறிப்பிட்ட சதவிகித வாக்குகளைப் பிரித்ததால், தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு சாதகமாக மாறிப் போயின. இதனை எந்தக் கருத்துக் கணிப்பாலும் முன்னறிவிக்க முடியவில்லை.
பிற தேர்தல் அனுபவங்கள்: பிற மாநில பேரவைத் தேர்தல்களிலும், மக்களவைத் தேர்தல்களிலும் கூட இதேபோன்ற கணிப்புப் பிழைகளைக் காண முடியும்.
உதாரணமாக, 2020-இல் பிகாரில் நடைபெற்ற பேரவைத் தேர்தலின்போது நிதிஷ்குமார் (ஐக்கிய ஜனதாதளம்) தலைமையிலான அரசு தோல்வியுறும் என்றும், ராஷ்ட்ரீய ஜனதாதளம் தலைமையிலான மகா கூட்டணியே வெல்லும் என்றும், பெரும்பாலான ஊடகங்களால் கணிக்கப்பட்டது. மாறாக, நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தலில் வென்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது.
2019-இல் ஜார்க்கண்டில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் பாஜக முன்னிலை பெறும் என்றும் தொங்கு சட்டப்பேரவை அமையும் என்றும் பெரும்பாலான ஊடகங்கள் கணித்திருந்தன. மாறாக, ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை வலிமையுடன் வென்று ஆட்சியைப் பிடித்தது.
2014 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின்போது காங்கிரஸ் ஆட்சி இழப்பதை பெரும்பாலான ஊடக கருத்துக் கணிப்புகள் உறுதிப்படுத்தியபோதும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 336 இடங்களை வெல்லும் என்பதை எந்தக் கணிப்பும் சுட்டிக்காட்டவில்லை.
2021 தமிழக சட்டப் பேரவைத் தேர்தலிலும், பொதுக் கருத்தை உருவாக்கும் முயற்சிகள் தென்படுகின்றன. தேர்தலுக்குப் பின் இந்தக் கணிப்புகளை ஆய்வு செய்தால், ஆய்வு நெறிகள் எங்கே தடம் புரள்கின்றன என்பதை உணர முடியும்.
பிழைக்குக் காரணம் என்ன?: புள்ளியியல் முறை சார்ந்த கருத்துக் கணிப்புகளில் பிழை நேரிடும் சதவிகிதம் அனுமதிக்கப்படுகிறது. அந்தப் பிழை சதவிகிதம் எல்லை மீறும்போதுதான் ஆய்வு முறைமீது சந்தேகம் ஏற்படுகிறது. தேர்தலுக்குப் பிறகு உண்மை நிலவரத்துடன் தங்கள் கருத்துக் கணிப்புகளை ஒப்பிட்டுப் பார்க்க ஊடகங்கள் தயாராகாத வரை இத்தகைய பிழைகள் தொடரும். இதற்கு, ஊடகங்களின் அரசியல் சார்பு நிலைப்பாடு, ஒரு கட்சியை வெல்ல வைக்கும் வர்த்தக உத்தி, அரசியல் கட்சிகளின் பின்புலத்துடன் மேற்காாள்ளப்படும் கணிப்புகள், தவறான தரவுகள் சேகரிப்பு, மக்களை முழுமையாகப் பிரதிபலிக்கும் வகையிலானதாக அல்லாமல் மேற்காாள்ளப்படும் கணிப்புகள் போன்றவையே காரணம்.
6.27 கோடி வாக்காளர்களைக் கொண்ட தமிழகத்தில் சுமார் 5,000 முதல் ஒரு லட்சம் வரையிலான மாதிரிகளைச் சேகரித்து உண்மையான மக்கள் கருத்தைப் பதிவு செய்ய முடியாது என்ற உண்மையை முதலில் நாம் புரிந்துகாாள்ள வேண்டும்.
ஏனெனில், பெரும்பாலான கருத்துக் கணிப்புகள், எளிதில் அணுகக் கூடியவர்களிடம் மட்டுமே பெறப்படுகின்றன. தொலைதூரக் கிராமங்கள், மலைக்கிராமங்களில் வாழ்வோரின் கருத்துகளும், விளிம்புநிலை மக்களின் கருத்துகளும் பெறப்படாத கருத்துக் கணிப்புகள் முழுமை பெறுவதில்லை.
தவிர, உள்நோக்கத்துடனோ, ஒருசார்புடனோ மேற்காாள்ளப்படும் எந்தச் செயலும் உண்மையான பலனை அளிப்பதில்லை. அதனேயே மக்கள் கருத்துத் திணிப்புகள் என்கின்றனர்.
அதனால்தான் தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுகின்றன. எனினும், ஊடக சுதந்திரம் என்ற கவசத்தின் பின்னே ஒளிந்துகாாள்ளும் சுயநல ஊடகங்களால் இதழியல் தர்மம் சீர்குலைகிறது.
தற்போதைய தேர்தல் முறையில் வெல்லும் வாய்ப்புள்ள கட்சி என்ற தோற்றத்தை உருவாக்குவதே முக்கியமானதாக உள்ளது. அப்போதுதான் யாருக்கு வாக்களிப்பது என்ற தடுமாற்றத்தில் இருக்கும் நடுத்தர வாக்காளர்களைக் கவர முடியும். அதற்காக, ஊடகங்களை விலைபேசும் அரசியல் கட்சிகளுக்குத் துணைபோவதாக, தேர்தல் கருத்துக் கணிப்புகள் மாறி வருகின்றனவோ என்ற புகாரைப் புறந்தள்ள முடியவில்லை.