தஞ்சாவூரில் 4-ம் கட்ட சுற்றுப் பயணத்தைத் தொடங்குகிறார் மு.க. ஸ்டாலின்!பாமக விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு! திருவண்ணாமலையில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!தென்றலாக இருக்கும் தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள்! - முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,720 உயர்வு!டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! சென்செக்ஸ் 2,600 புள்ளிகள் உயர்வு!விஜய்யின் கடலூர் பிரசாரத்துக்கு அனுமதி!கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு!
/

விஜய்யின் பிரசார வாகனத்தைப் பின்தொடராதீர்! கட்சித் தலைமை அறிவுறுத்தல்!!

நெல்லையில் நடைபெறும் விஜய்யின் பிரசாரப் பேரணியில், அவரின் வாகனத்தைப் பின்தொடராதீர் என தவெக தலைமை அறிவுறுத்தியுள்ளதைப் பற்றி...

News image

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். - பிடிஐ

Updated On :8 ஏப்ரல் 2026, 5:10 am

நெல்லையில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரசாரப் பேரணியில், அவரின் வாகனத்தைப் பின்தொடர வேண்டாமென தவெக தலைமை அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏப். 23 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் விஜய், தான் வேட்புமனுத் தாக்கல் செய்த மார்ச் 30 ஆம் தேதி சென்னை கொளத்தூர், பெரம்பூர், திருச்சி உள்ளிட்ட தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் பிரசாரம் மேற்கொண்ட நிலையில், அதனைத் தொடர்ந்து திட்டமிடப்பட்டிருந்த வில்லிவாக்கம், தி.நகர் உள்ளிட்ட தொகுதிகளில் நடைபெறவிருந்த பிரசாரங்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் பிரசாரம் செய்யவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கேடிசி நகரில் இன்று (ஏப். 8) மாலை நடைபெறும் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

விஜய் பங்கேற்கும் பிரசாரத்துக்கு 51 நிபந்தனைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், தவெக தொண்டர்களுக்கு கட்சித் தலைமை அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறது.

அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தவெக தலைவர் விஜய், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட திருநெல்வேலி - தூத்துக்குடி புறவழிச் சாலையில் உள்ள காப்பர் லீப் ஹோட்டல் அருகே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்தில் நண்பகல் 1 மணி முதல் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.

அதன்பின்னர், தாழையூத்து, தச்சநல்லூர், வண்ணார்பேட்டை, மார்க்கெட் மற்றும் கேடிசி நகர் வழியாக, தூத்துக்குடி செல்கிறார். மாலை 3 மணி முதல், தூத்துக்குடி நகர உட்கோட்டம், மைல் பகுதியில் இருந்து விவிடி சிக்னல் வரை சாலை நிகழ்ச்சிநடத்த தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.

இந்தப் பிரசார நிகழ்ச்சிக்காக, தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பிரசார நிகழ்வுகளில் கலந்துகொள்ள வரும் கட்சித் தலைவர் விஜய்யின் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களிலும் யாரும், அறவே பின்தொடரக் கூடாது.

தேர்தல் ஆணைய விதிகளை பின்பற்றுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். மேலும், இந்தத் தேர்தல் பிரசார நிகழ்வுகளில், கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, சமூக வலைதளம் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

The leadership of the Tamilaga Vettri Kazhagam has instructed supporters not to follow the vehicle of its leader, Vijay, during the campaign rally currently underway in Nellai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.