பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை தலைமை அலுவலகத்தில் காலியாக உள்ள காவலர், துப்புரவாளர் பணியிடங்களுக்கு தகுதியானோர் வரும் 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னையில் செயல்பட்டு வரும் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை தலைமை அலுவலகத்தில் முழுநேர தலா 2 காவலர் மற்றும் துப்புரவாளர் காலிப்பணியிடங்கள் இனசுழற்சி அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கு மாதந்தோறும் ரூ.4800-10000 தர ஊதியம் ரூ.1300 என்ற அடிப்படையில் அளிக்கப்படவுள்ளது.
இதில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (முன்னுரிமை பெற்றவர்), பிற்படுத்தப்பட்டோர்-பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் தவிர (முன்னுரிமை பெற்றவர்) காவலர் பணியிடமும், பொதுப்போட்டி (முன்னிரிமை பெற்றவர்), ஆதிதிராவிடர்(முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர்) துப்புரவாளர் பணியிடமும் நிரப்பப்பட உள்ளன.
இதற்கு தமிழில் எழுத படிக்கத் தெரிந்த 3-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு தோல்வி அடைந்தோர், வயது வரம்பு 30 வயதுக்குள்ளும், மற்ற பிரிவினர் அரசு விதிமுறைகளின் படி தேர்வு செய்யப்படுவர்.
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் "முதன்மைச் செயலர் ஆணையர், முதன்மைச் செயலர் ஆணையர் அலுவலகம், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை, 259-அண்ணாசாலை, டி.எம்.எஸ்.வளாகம், தேனாம்பேட்டை, சென்னை-6' என்ற முகவரிக்கு வரும் 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம் என அவர் தெரிவித்துள்ளார்.