ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனங்கள் மீது, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் இதுவரை 43 வீரர்கள் உயிரிழந்தனர். பலர் வீரர்கள் கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். இந்நிலையில் பிற வாகனங்களில் சென்ற வீரர்கள், உயிருக்கு போராடிய சகவீரர்களை காப்பாற்ற முயன்ற போது, மறைந்திருந்த தீவிரவாதிகள், சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில், காப்பாற்ற சென்ற வீரர்கள் சிலர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டார்.