சென்னை, ஏப். 22- 1972 ஆம் ஆண்டு வன விலங்கு (பாதுகாப்பு) சட்டம் விதிமுறைகள் ஜன. 21 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
வன விலங்கு சட்டத்தின்படி பறவைகள், காட்டுப்பூனை, வெளி மான், புலி, முதலை, கடல் பன்றி, மயில் முதலியவைகளைக் கொல்லுதல், ஊறு விளைவித்தல், பிடித்தல், வேட்டையாடுதல் முதலியவை கூடாது.
வன விலங்குச் சட்டத்தின் ஷெட்யூல் 2, 3 மற்றும் 4-ல் கண்டுள்ள விலங்குகள், காட்டெருமை, ராட்சஸ அணில், மலைப்பாம்பு, சிறுத்தை, புள்ளிமான், கூடுமான், ஆந்தை, குரங்கு வகைகள், காட்டுப்பன்றி, காட்டாடு, பல வகையான நீர்ப்பறவைகள், கௌதாரி, கூனக்கடா, புல் வகைகள், காடை, உள்ளான் முதலியவைகளை தலைமை வன விலங்குக் காப்பாளர் அல்லது உரிமை பெற்ற அலுவலரிடமிருந்து உரிமம் பெறாமல் அவைகளைப் பிடிக்கவோ, வேட்டையாடவோ, வியாபாரம் செய்யவோ கூடாது.
உரிமம் இன்றி சில விலங்குகளையோ அல்லது பறவைகளையோ வளர்க்கக்கூடாது.
வன விலங்குப் பொருள்கள் மீது அதாவது கொம்புகள், தோல்கள், தோலினால் செய்யப்பட்ட கைப்பைகள், காலணிகள், பெட்டிகள், பெல்ட்டுகள் முதலியன, வன விலங்குச் சின்னங்கள், வளர்ப்பு மிருகங்கள், மாமிசம் மற்றும் பஞ்சடைந்த போலி உயிரின வேலைகள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட வன விலங்குகள், பறவைகளின் மாமிசத்தை சிற்றுண்டிச் சாலை, உணவு விடுதிகள் முதலியவற்றில் சமைக்கவோ, பரிமாறவோ கூடாது. மற்றவைகளுக்கு தலைமை வன விலங்குக் காப்பாளர் அல்லது உரிமை பெற்ற அலுவலரிடமிருந்து முன் அனுமதி பெற வேணடும்.
உரிமம் பெறாத விற்பனையாளர்களிடமிருந்து வன விலங்குகளையோ அல்லது பறவைகளையோ வாங்குவது கூட குற்றமாகும்.
வன விலங்குச் சட்டத்தையோ அல்லது விதிகளையோ அல்லது உரிமத்தில் கண்டுள்ள நிபந்தனைகளையோ மீறி நடப்பவர்களுக்கு இரண்டு ஆண்டு கால சிறைத் தண்டனையும், ரூ. 2,000 வரை அபராதமும் விதிக்கப்படும்.
Summary
April 23, 1976: Restrictions on Hunting and Trade of Wild Animals and Birds
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.











