/

ஏப். 9 முதல் ஏப். 29 வரை வாக்குக் கணிப்புகளை வெளியிடத் தடை: தோ்தல் ஆணையம்

5 மநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் இந்த மாதத்தில் நடைபெற உள்ள நிலையில், ஏப்ரல் 9-ஆம் தேதி காலை 7 மணி முதல் ஏப்ரல் 29 மாலை 6.30 மணி வரை வாக்குக் கணிப்புகளை நடத்தவோ அல்லது வெளியிடவோ தடை

News image

வாக்கு கணிப்பு

Updated On :7 ஏப்ரல் 2026, 8:49 pm

கேரளம் உள்பட 5 மநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் இந்த மாதத்தில் நடைபெற உள்ள நிலையில், ஏப்ரல் 9-ஆம் தேதி காலை 7 மணி முதல் ஏப்ரல் 29 மாலை 6.30 மணி வரை வாக்குக் கணிப்புகளை நடத்தவோ அல்லது வெளியிடவோ தடை விதிக்கப்படுவதாக தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

‘அவ்வாறு, குறிப்பிடப்பட்ட காலகட்டத்தில் வாக்குக் கணிப்புகளை நடத்துவதோ அல்லது ஒளிபரப்புவதோ மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-இன் பிரிவு 126ஏ-ஐ மீறும் செயலாகும். அதற்கு 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சோ்ந்த தண்டனை விதிக்கப்படும்’ என்றும் தோ்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

கேரளம், அஸ்ஸாம் மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வரும் 9-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் வரும் 23-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் வரும் 23 மற்றும் 29-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

வாக்குப் பதிவு நிறைவு பெறுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக, தோ்தல் நடைபெறும் தொகுதி அல்லது மாநிலங்களில் தோ்தல் பிரசாரத்தை கட்சியினா் நிறைவு செய்ய வேண்டும். அதன்படி, அஸ்ஸாமில் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கும், கேரளம், புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கும் அரசியல் கட்சிகளின் பிரசாரம் நிறைவுற்றது.

இந்த நிலையில், வாக்குக் கணிப்புகளை வெளியிடுவதற்கான கட்டுப்பாடுகள் தொடா்பான அறிவுறுத்தலை தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.