

அம்மான் (ஜோர்டான்), பிப் 7 - 160 வயது வரை வாழ்ந்து ஒருவர் "வயோதிகம்" காரணமாக இறந்தார். ஹஜ் அலி அப்துல்லா அபௌனா என்பவர்தான் ஜோர்டானிலேயே மிக நீண்ட நாள் உயிருடன் வாழ்ந்தவர். அவர் கடந்த வியாழக்கிழமையன்று அம்மானுக்கு 50 கிலோ மீட்டர் வடக்கே உள்ள தம்முடைய சொந்த ஊரான பர்மாவில் காலமானார். அவர் இறக்கும் போது அவருக்கு வயது 160.
அபௌனா 5 முறை திருமணம் செய்து கொண்டவர். அவருக்கு பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் கொள்ளுப்பேரர்களும் 150 பேர் இருக்கிறார்கள். அவர் பெரும்பாலும் பால், தேன் காய்கறிகள் சாப்பிட்டே உயிர் வாழ்ந்ததாகவும் மதுபானமே சாப்பிட்டதில்லை என்றும் புகை பிடித்ததில்லை என்றும் பத்திரிகைகள் கூறின.
புதுடில்லி, பிப். 7 - இரு காங்கிரஸ் இணப்பை விரும்பும் எட்டு பேர்கள் கொண்ட த.நா. பழைய காங்கிரஸ் பிரதிநிதிகள் தூது கோஷ்டியொன்று பிரதம மந்திரியைச் சந்தித்து, இணைப்பு பற்றி அவருடன் அரை மணி நேரம் விவாதித்தார்கள். பின்னர் காங்கிரஸ் தலைவர் பரூவாவையும் சந்தித்தார்கள்.
இன்றைய விவாதங்களின் போது மரகதம் சந்திரசேகரும் கூட இருந்தார்.
இத்தூது கோஷ்டியினர் உள்துறை மந்திரி பிரும்மானந்த ரெட்டியையும் சந்தித்தனர். ராஷ்டிரபதி ஆட்சி பிரகடனத்துக்குப் பிறகு ராஜ்யத்தில் அமைதி நிலவுவதாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். மக்களிடைய ஆறுதல் உணர்ச்சி ஏற்பட்டிருப்பதாக இக்கோஷ்டியைச் சேர்ந்த ஒருவர் கூறினார்.
நிற்க, பரூவாவின் அவசர அழைப்பின் பேரில் புது காங்கிரஸ் பிரதேச தலைவர் கே. எஸ். ராமசாமி, உப தலைவர்கள் ஈ.வி.கே. சம்பத், எம். ஆறுமுகசாமி இன்று மாலை சென்னையிலிருந்து டில்லிக்குப் பயணமானார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.