பொதுமக்கள் ஆரோக்கியமாக வாழ சிறுதானிய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர் சு. கணேஷ்.
பாரம்பரிய உணவுத் திருவிழா சமூக நலம், சத்துணவுத் திட்டத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் பாரம்பரிய உணவுத் திருவிழா ஆட்சியரக அலுவலகத்தில் நடைபெற்ற சிறுதானிய உணவு வகைகள் செயல் முறை விளக்கக் கையேட்டை வெளியிட்டுப் பேசியது:
தமிழக முதல்வர் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை சார்பில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்கள். இதன்படி பொதுமக்கள் நோயற்ற நல வாழ்வு வாழ சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அரசு அளித்த உத்தரவின்பேரில் நமது மாவட்டத்தில் பாரம்பரிய உணவு திருவிழா தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதில் உடல் நலனுக்கு நன்மை பயக்கும் சிறு தானியங்கள் பற்றிய செயல்விளக்கம், பயன்கள் மற்றும் சமையல் முறை, பொதுமக்களுக்கு செய்து காண்பிக்கப்பட உள்ளது. இந்த உணவு திருவிழா ஆட்சியரகத்தில் தொடங்கி புதன், வியாழக்கிழமைகளில் நகர்மன்றத்திலும் நடைபெற உள்ளது.
சிறுதானியங்களை உணவில் பயன்படுத்தும்போது இதில் அடங்கியுள்ள சத்துகளான மெக்னீசியம் ஒற்றைத் தலைவலியையும், இதய நோயையும் போக்கும். நையாசின் கூடுதலான கொழுப்பு அளவைக் குறைக்கும். பாஸ்பரஸ் கொழுப்பு வளர்ச்சிதை மாற்றம், திசுக்களை மேம்படுத்துவதுடன், உடலுக்கு சக்தியையும் கொடுக்கும்.
சிறுதானியங்கள் நீரிழிவு நோய் வராமல் தடுப்பதுடன், இதன் நார்ச் சத்து மார்பகப் புற்று நோயிலிருந்து காத்து குழந்தை பருவத்திலேயே ஆஸ்துமா வராமல் தடுக்கும். பொதுமக்கள் ஆரோக்கியமாக வாழ சிறுதானிய உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். சிறுதானியங்களை அனைவரும் தினசரி உணவில் சேர்த்து நோயற்ற நல வாழ்வு வாழ வேண்டும் என்றார் ஆட்சியர்.
இந்திய மருத்துவம், ஓமியோபதி துறை சார்பில் மாவட்ட சித்த மருத்துவத் துறையினர் வீட்டு மூலிகைத் தோட்டம், நோயின்றி வாழ்வது குறித்த தகவல்கள், கீரைகளின் பயன்கள், இயற்கை மூலிகை செடிகள், நிலவேம்பு குடிநீர் போன்ற பல்வேறு தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் காட்சி விளக்கம் அமைக்கப்பட்டிருந்தது.
மாவட்ட வருவாய் அதிகாரி மீராபரமேஸ்வரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் எம். சந்தோஷ்குமார், வேளாண் இணை இயக்குநர் அண்ணாமலை, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் சிறியபுஷ்பம் மணிமேகலை, மாவட்ட சமூகநல அலுவலர் ரேணுகா, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.