உடல் பருமனைக் குறைப்பதும், மேலும் பருமன் அதிகரிக்காமல் இருப்பதும் நாம் உண்ணும் உணவில்தான் இருக்கிறது. இப்படி உணவு உண்பதில் சில கட்டுப்பாடுகளும் முறைகளும் இருக்கின்றன.
உண்ணும் முறைகள்
உணவை மெதுவாக மென்று விழுங்க வேண்டும்.
சாப்பிட அமர்வதற்கு முன்னால் உண்மையான பசியா அல்லது ஏதாவது சாப்பிட்டால் பரவாயில்லை என்ற எண்ணம் மட்டும்தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது.
உணவை சிறு தட்டு அல்லது குழிக் கிண்ணத்தில் வைத்து உண்ணும் பழக்கம் நல்லது.
தொலைக்காட்சி முன் அமர்ந்தபடி நொறுக்குத் தீனி, சுவையூட்டப்பட்ட பானங்கள் அல்லது உணவையும் கூட உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
உண்ணத்தக்க உணவு வகைகள்
காய்கறி சூப், சாலட் போன்றவை பசி உணர்வை மட்டுப்படுத்தக் கூடியவை. கலோரி குறைந்தவை. எளிதில் ஜீரணிக்கக் கூடியவை. அதனால் உணவுக்கு முன் இவற்றை சேர்த்துக் கொள்வது நல்ல பயனளிக்கும்.
உணவு மேஜையில் அமர்ந்ததும் முதலில் காய்கறி சூப் அருந்துதல் நல்லது. பழங்கள், காய்கறிகள், கேரட், ஏப்ரிகாட், புரோகோலி, சில கீரைவகைகள் ஆகியவை ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆற்றல் உள்ளவை. ஆகவே இவற்றுள் ஏதாவது ஒன்றுடன் தக்காளி, வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் சூப் கலோரி குறைந்தது என்பதோடு பசி உணர்வை மட்டுப்படுத்தக் கூடியது.
சாலட்
சூப் அருந்திய பின், உணவு உண்பதற்கு முன்னதாக சிறு தட்டு நிறைய முளைகட்டிய தானியம், பச்சைப் பயறு, உளுந்து, கொண்டைகடலை, சிறிது வெந்தயம் மற்றும் தக்காளி, வெள்ளரி வெங்காயம், கேரட் ஆகியவற்றின் கலவையை உண்பது நல்லது.
தானியங்களை தீட்டுவது, இயந்திரங்களின் மூலம் சுத்திகரிப்பது போன்றவற்றால் சத்துகள் பெரும்பான்மையாக குறைந்துவிடுகிறது. தவிர 32 செல்சிஷயத்துக்கு மேற்பட்ட வெப்பத்தில் சமையல் செய்கையில் எஞ்சியுள்ள சத்துகள், நொதிகள், வைட்டமின் பி வகைகள் சிதைவடைய நேரும். எனவே, முழுமையாக சமைக்கப்பட்ட எந்த உணவுக்கும் உயிர் இருக்காது.