கசப்பான விஷயங்கள்தான் இனிப்பானவை! வரமளிக்கும் வெந்தயத்தின் 5 பலன்கள்!

வெந்தயம் என்றாலே கசப்பாக இருக்கும் என்று பலர் உணவில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.
வெந்தயம்
வெந்தயம்

வெந்தயம் என்றாலே கசப்பாக இருக்கும் என்று பலர் உணவில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் நம் அஞ்சரை பெட்டியில் இருக்கும் எளிமையான மருந்து அது. முக்கியமாக வெந்தயம் பெண்களின் உடல்நலத்துக்கு மிகவும் நல்லது. காரணம், அதில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. பிரசவத்துக்கு பின் ஏற்படும் இடுப்பு வலிக்கு வெந்தயம் மிகவும் நல்லது. மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலி,  வயிறு உப்பிசம், வயிற்று வலி போன்றவைக்கு சிறிதளவு வெந்தயத்தை மோருடன் அல்லது தண்ணீருடன் சாப்பிட வலி குறையும். வெந்தயம் மற்றும் வெந்தயக் கீரை இரண்டுமே ஆரோக்கியத்துக்கும், பல நோய்களுக்கும் தீர்வாக விளங்குகிறது. அதனால்தான் நம் முன்னோர்கள் நம் உணவில் வெந்தயத்தை சேர்த்துக் கொண்டனர். இட்லிக்கு மாவு அரைக்கும் போது சிறிதளவு வெந்தயம் சேர்ப்பதும் இந்த ஆரோக்கிய அடிப்படையில்தான்.

பலன்கள் :

  1. வெந்தயத்தில் அதிகளவு இரும்புச் சத்து உள்ளது.  இது உடல் சூட்டை தணிக்கும். ரத்த விருத்திக்கு உதவும்.
  2. உடல் மெலிந்தவர்கள் புஷ்டியாக வேண்டும் என்றால், தினமும் உணவில் வெந்தயம் சேர்த்துக் கொண்டால் உடல் நன்றாகத் தேறி வரும். 
  3. சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.  வெந்தயத்தில் இயல்பாக இருக்கும் கசப்புத்தன்மை சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது.
  4. வெந்தயக் கீரை மிகச் சிறந்த மலமிளக்கி.  தொடர்ந்து வெந்தயத்தை உனவில் சேர்த்து வர அது மலச்சிக்கலை முற்றிலும் தவிர்க்கும்.  மூல வியாதி இருப்பவர்களுக்கு வெந்தயம் வரப்பிரசாதம். ரத்த மூலம் இருப்பவர்களுக்கும் இது பயன்படும்.
  5. வெந்தயம் சிறந்த உள் மருந்து மட்டுமல்ல சருமத்துக்கும் தலைமுடிக்கும் ஆரோக்கியம் தர வல்லது.  தலைமுடி வேர்களுக்கு பலம் அளிக்கும். சிறிதளவு வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து, அரைத்து அதன்பின் தலைமுடியில் தேய்த்து கால் மணி நேரம் ஊற வைத்து பின்னர் குளிக்கலாம். உடல் சூடு நன்றாக தணிந்து, கூந்தல் பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை இதைச் செய்யலாம்.

வெந்தயத்தை எப்படி எல்லாம் சாப்பிடலாம்?

மாத்திரை விழுங்குவது போல சிறிதளவு வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடிக்கலாம்.

வெந்தயத்தை 8 மணி நேரம் ஊற வைத்து, அதை பருத்தி துணியில் மூடி வைத்து பின் மீண்டும் சில மணி நேரம் விட்டுவிட அது நன்றாக முளை கட்டிவிடும். முளை கட்டிய வெந்தயத்தை அரைத்து கஞ்சி காய்ச்சி வெல்லம் சேர்த்து பருக, ருசியாக இருப்பதுடன், உடல் வலி, சோர்வு எல்லாம் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.

வெந்தயத்தைப் பொடி செய்து வைத்து, தினமும் மோரில் சிறிதளவு உப்புடன் கலந்து குடிக்கலாம்.

வெந்தயத்தையும், கோதுமையையும் லேசாக வறுத்து பொடி செய்து காபி அல்லது தேநீராகத் தயாரித்து அருந்தலாம். உடலுக்கு உறுதியும் நாள் முழுவதும் சுறுசுறுப்பும் ஏற்படும்.

வெந்தயத்தில் என்னென்ன உணவுகள் தயாரிக்கலாம் ?

வெந்தய தோசை, வெந்தயக் கஞ்சி, வெந்தயக் களி, வெந்தயக் குழம்பு, வெந்தய காபி, வெந்தய சாதம் என பல வகையில் வெந்தயத்தை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com