காலை உணவு உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியம். நாள் முழுவதற்கும் தேவையான சக்தியை தரவல்லது காலை உணவுதான். எனவே தினமும் தவறாமல் காலை உணவை சாப்பிட்டுவிடுவது நல்லது. அதிலும் சர்க்கரை நோயாளிகள் காலை உணவைத் தவிர்க்கவே கூடாது. அப்படி தவிர்த்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு நாள் முழுவதும் அதிகரித்துவிடும் என எச்சரிக்கிறது ஆய்வு ஒன்று.
காலையிலிருந்து மதியம் வரை எதுவுமே சாப்பிடாமல் இருக்கும் டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு தாறுமாறாகிவிடும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
டைப் 2 சர்க்கரை நோயாளிகள் காலை உணவைத் தவிர்த்தால் அது நாள் முழுவதும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பாதிக்கும, தவிர மூன்று மாத ரத்தப் பரிசோதனை முடிவுகளில் HbA1C சராசரி ரத்த குளூகோஸ் அளவில் மாறுபாடுகள் ஏற்பட்டிருக்கும் என்கிறார் இஸ்ரேல் ஆராய்ச்சியாளர் மற்றும் டெல் அவிவ் பல்கலைக்கழகப் பேராசிரியர் டானியலா ஜுகுபோவிஸ்.
அறுபது வயதை நெருங்கும் டைப் 2 சர்க்கரை நோயாளிகள் 22 நபர்களை வைத்து இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இரண்டு நாட்களில் அவர்களுக்கு மதிய உணவும் இரவு உணவும் ஒரே விதமான கலோரிகள் கிடைக்கும்படியான உணவு தரப்பட்டது.
இதில் ஒரே ஒரு வித்யாசம் மட்டுமே. முதல் நாள் அவர்கள் காலை உணவு சாப்பிட்டவர்கள், அடுத்த நாள் மதியம் வரை சாப்பிடாமல் இருந்தார்கள். காலை உணவு சாப்பிடாமல் இருந்தவர்களின் குளூக்கோஸ் அளவு மதிய உணவு சாப்பிட்ட பின்னும் 268 mg/dl அதன்பிறகு இரவு உணவிற்குப் பிறகு 298 mg/dl எனும் அளவு கணக்கிடப்பட்டது. மற்ற தினத்தில் அதாவது காலை உணவு சாப்பிட்ட அன்று 192 mg/dl மற்றும் 215 mg/dl எனவும் முடிவுகள் கண்டறியப்பட்டது.
மதிய உணவிலும் இரவு உணவிலும் பெறப்படும் மாவுச்சத்து அளவு குறைந்திருந்தால் பிரச்னை இருக்காது ஆனால் காலை உணவைத் தவிர்ப்பதால் நிச்சயம் சிக்கல்தான்.
இந்த ஆய்வாளர்களின் தொடர்ச்சியாக பட்டினி கிடக்கும் போது ரத்தத்தில் உள்ள கொழுப்பு அமிலங்கள் தூண்டப்பட்டு இன்சுலின் சுரப்பை பாதிக்கும் என்று விளக்கினார்கள்.