சூரிய நமஸ்காரம் என்றால் என்ன?
24 ஆசனங்களை ஒன்றிணைந்தது தான் சூரிய நமஸ்காரம். உடல் நலத்துக்காக மட்டுமின்றி யோக நெறியில் இது மிகவும் முக்கியமானதாகும்.
யார் செய்யலாம்?
சூரிய நமஸ்காரம் எல்லா வயதினரும் செய்யலாம். உடல் நோயை குணப்படுத்த சில காலம் மட்டும் வரை செய்துவிட்டு உடல் நலமானதும் பலர் யோகா செய்வதையே விட்டுவிடுவார்கள். அது சரியில்லை. யோகாவை தொடர்ந்து செய்வதால் தான் அதிக பலன் கிடைக்கும். தவிர மீண்டும் அந்த நோய் தாக்காமல் இருப்பதற்கு தொடர் பயிற்சி அவசியம். சூரிய நமஸ்காரம் செய்ய ஆரம்பித்தவுடன் அதை வாழ்க்கையின் ஒரு ஒழுக்கநெறியாகவே கடைபிடிக்க வேண்டும். அதை தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்படி செய்தால் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே அது ஆகிவிடும்.நோய்கள் எதுவும் நெருங்காது நீண்ட காலம் மன அமைதியுடன் வாழ வழி செய்யும்.
எப்படி செய்வது?
1. கால்களை ஒன்றாக வைத்தபடி நிற்கவும். கைகளை தலைக்கு மேல் உயர்த்தவும். கைகளை ஒன்றாக இணைத்து மார்புக்கு நேராகக் கொண்டு வரவும். கைகளை வணங்குவது போல் கொண்டு வரவும். மீண்டும் கைகளை மேலாகத் தூக்கியபடி கீழே இறக்கவும். இந்த நிலையின் பெயர் பிராண வாசனம் என்பார்கள்.
2. மூச்சை உள் இழுத்தபடி, கைகளை மேலேத் உயர்த்தவும். கைகள் உங்கள் காதுகளை உராய்ந்தபடி இருக்க வேண்டும். மெதுவாக கைகளை பின்புறமாக வளைக்கவும். கைகளுக்கு இணையாக தலையும் கவிழ வேண்டும். இந்த ஆசன நிலைக்கு ஹஸ்த உட்டானாசனம் என்று பெயர்.
3. மூச்சை வெளியே விட்டபடி மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பவும். கைகளை கால்களுக்கு இணையாக தரையைத் தொடவும். தலை கால்களின் முட்டியைத் தொட்டபடி இருக்க வேண்டும். இதே நிலையில் ஒரு சில விநாடிகள் இருக்க வேண்டும். இது பாத ஹஸ்தாசனம்.
4. மூச்சை உள் இழுத்தபடி உங்களது வலது காலை பின்னோக்கி வைக்கவும். அதே சமயம் இரண்டு கைகளையும் இடது காலுக்கு இணையாக ஊன்றவும். தலையை மேல் நோக்கியவாறு பார்க்கவும். இதே நிலையில் ஒரு சில விநாடிகள் இருக்கவும். இது அஸ்வ சஞ்சலான ஆசனம்.
5. மூச்சை வெளியே விட்டபடி பின்னோக்கி செலுத்திய வலது காலுக்கு இணையாக இடது காலையும் எடுத்துச் செல்லவும். கைகளை நன்கு நீட்டி ஊன்றவும். இடுப்புப் பகுதி நன்று உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும். அதாவது வளைவு தூண் போன்று உங்கள் உடல் அமைப்பு இருக்க வேண்டும். இதற்கு துவிபாத அஸ்வ சஞ்சலான ஆசனம் என்று பெயர்
6. மீண்டும் மூச்சை உள்ளிழுத்தபடி உடலை தரையில் படுக்க வைக்கவும். கால்கள், முட்டி, கைகள், மார்பு மற்றும் நெற்றி ஆகியவை தரையை தொட வேண்டும். இடுப்புப் பகுதி மட்டும் சற்று உயர்ந்து இருக்க வேண்டும். இப்போது மூச்சை வெளியே விடவும். இது அஸ்டாங்க நமஸ்காரம்.
7. மூச்சை உள்ளிழுத்தபடி தலையை பின்புறமாக நீட்டவும். உங்கள் முதுகை எவ்வளவு முடியும் அவ்வளவிற்கு பின் பக்கமாக வளைக்கவும். இதைத்தான் புஜங்காசனம் என்று அழைப்பர். இதுவே புஜங்காசனம்.
8. மூச்சை வெளியே விட்டபடி, மெதுவாக கைகளை உயர்த்தவும். அதற்கேற்ப இடுப்பு மற்றும் தலையையும் உயர்த்தி மீண்டும் வளைவுத் தூண் அமைப்பை ஏற்படுத்தவும். இந்த நிலைக்கு அத முக்த சவாசனம் என்று பெயர்,
9. மெதுவாக மூச்சை உள்ளே இழுத்தபடி, வலது காலை ஒரு அடிக்கு முன்னாடி முட்டியை மடக்கியபடி கொண்டு வந்து வைக்கவும். தலையை மேலாகத் தூக்கி கைகளை நேராக வைக்கவும்.இது அஸ்வ சஞ்சலான ஆசனம்.
10. வெளியே மூச்சை விட்டபடி, வலது காலுக்கு இணையாக இடது காலையும் மடக்கியபடி கொண்டு வரவும். தலை முட்டியைத் தொட்டபடி இருக்க வேண்டும். இது பாத ஹஸ்தாசனம்
11. மூச்சை உள்ளே இழுத்தபடி மெதுவாக கைகளை உயர்த்தவும். பின்புறமாக வளைந்து கைகளைப் பார்த்தபடி தலை இருக்க வேண்டும். இது ஹஸ்த உட்டானாசனம்
12. மீண்டும் வணக்கம் செய்யும் நிலைக்கு வர வேண்டும்.
பின்னர் பழைய நிலைக்கு வர வேண்டும். இதுதான் சூரிய நமஸ்காரத்தின் முழுமையாகும். இதே முறையை அடுத்த காலுக்கு மாற்றி செய்யவும்.
என்ன பலன்கள்?
சூரிய நமஸ்காரம் உங்கள் நாடிகளைத் திறந்து, உங்களுக்குள் இருக்கும் சூரியனை தூண்டிவிடுகிறது, தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலம் கணக்கிலடங்காத பலன்களைப் பெற முடியும். இதன் மூலம் நீங்கள் மிகவும் துடிப்பாக, உயிர்ப்புடன் இருக்க முடியும். தொடர்ந்து செய்து வர, அறிவுக் கூர்மை அதிகரிக்கும், உடல் மற்றும் மன நலத்திற்கும் ஏற்றது. நாள்பட்ட நோய்களான ஆஸ்துமா, இரத்தக் கொதிப்பு, மூட்டு வலி குணமாகும்.
சூரியநமஸ்காரம் செய்தால், தூங்கும் நேரம் மிகவும் குறைந்து, எப்போதும் ஒரு உயர்ந்த நிலையிலேயே இருக்க முடியும். எந்த முயற்சியும் செய்யாமலேயே தூக்கம் 4 அல்லது 41/2 மணி நேரமாக மிகச் சுலபத்தில் குறைந்துவிடும்.
அடி வயிற்றில் உள்ள உறுப்புகளுக்கு நல்லது. ஜீரண சக்திக்கு உகந்தது.
தோலுக்கு புத்துணர்ச்சி அளித்து, தோல் வியாதிகளைத் தடுக்கும்.
முதுகெலும்பையும், மார்பெலும்பையும் சீராக இயக்குகிறது.
சில ஜீரண பிரச்சினைகளை சரி செய்கிறது.
சில வாரப் பயிற்சியிலேயே உங்கள் உற்பத்தித் திறனும், செயல்திறனும் மேம்பட்டுவிடும்.
யோகப் பயிற்சி செய்வதால், ஒருவர் நாள்பட்ட நோய்களான ஆஸ்துமா, இரத்தக் கொதிப்பு, மூட்டு வலி போன்றவற்றிலிருந்து விடுதலை பெற முடியும்.
எச்சரிக்கை
முதுகுப் புறத்தில் பிரச்சினை இருந்தாலோ, இடுப்பு எலும்புப் பிரச்சினை இருப்பவர்களும் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம்.
சூரிய நமஸ்காரம் செய்வதற்கு முன்பு தெளிவான அறிவுரையைப் பெற வேண்டும். யோக பயிற்சியாளர்களிடம் நேரடியான ஆலோசனைகள் பெற்ற பின்னரே தொடர்ந்து செய்ய வேண்டும்.