இடதுசாரிகளின் இந்த முயற்சிக்குக் காரணம், பதவி மோகம் மட்டுமல்ல என்று பிரகாஷ் காரத் உள்பட அதன் மூத்த தலைவர்கள் கூறுகிறார்கள். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி இரண்டுமே தனியார் மயம், உலக மயம், அன்னிய முதலீடு, பங்குச் சந்தை சார்ந்த பொருளாதாரம், விவசாயத்தை விட ஏற்றுமதி சார்ந்த தொழில் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பது போன்ற பொருளாதாரக் கொள்கைகளிலும், வெளிவிவகாரக் கொள்கையிலும் ஒரே மாதிரியான நிலைப்பாடு எடுப்பதால், இதற்கு மாற்றாகக் கலப்புப் பொருளாதாரம், பண்டித நேருவின் அணிசாரா வெளிவிவகாரக் கொள்கை, விவசாய உற்பத்திக்கு முன்னுரிமை என்று மாறுபட்ட கொள்கைக் கூட்டணியை அமைப்பதன் முதல்படிதான் இது என்பது இடதுசாரிகளின் வாதம்.