/

பேச்சுவார்த்தை வேண்டாம்: பாஜக

காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி, இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2013, 8:03 pm

காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி, இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை இல்லை எனப் பிரதமர் மன்மோகன் சிங் தெளிவாக அறிவிக்க வேண்டும் என்று பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டார்.

தில்லியில்மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தில்லி ராம்லீலா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில் அவர் இதைத் தெரிவித்தார். அவர் மேலும் பேசியது:

போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி, எல்லைக் காட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து இந்திய ராணுவத்தினர் மீது அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை விரைவில் கூட்ட வேண்டும். மத்திய அரசு உரிய காலத்தில் தகுந்த நடவடிக்கை எடுத்திருந்தால், இத்தாக்குதலைத் தடுத்திருக்க முடியும்.

தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. சபைக் கூட்டத்தின்போது பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுடன் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது.

பாஜக ஆட்சி உறுதி: தில்லியில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து வருகிறது. ஆனால், அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. தில்லியில் அடிப்படை வசதிகளைச் செய்து தருவதில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்துள்ளது.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சி அமைப்பது இப்பேரணி மூலம் உறுதியாகியுள்ளது. அவ்வாறு பாஜக ஆட்சி அமைக்கும்போது, சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் நல்வாழ்வுத் திட்டங்களைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

சுகாதாரம், கல்வி, சாலை மேம்பாடு, கழிவுநீர் கால்வாய் திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் சரிவர செய்து தரப்படும் என்றார் ராஜ்நாத் சிங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.