

மும்பையை உலுக்கிய ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பீட்டர் முகர்ஜியை டிசம்பர் 14 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது.
மும்பையைச் சேர்ந்த இளம்பெண் ஷீனா போரா கொலை வழக்கில் திடீர் திருப்பமாக இந்திராணி முகர்ஜியின் மூன்றாவது கணவரும், தனியார் தொலைக்காட்சி நிறுவன முன்னாள் உயர் அதிகாரியுமான பீட்டர் முகர்ஜியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவரிட உண்மைக் கண்டறியும் சோதனை மேற்கொள்வதற்காக கடந்த வாரம் தில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதையடுத்து மும்பை நீதிமன்றத்தில் பீட்டர் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட உண்மைக் கண்டறியும் சோதனையின் முடிவுகள் கிடைக்கவில்லை. எனவே அச்சோதனையின்போது, ஏமாற்றக் கூடிய வகையிலான தகவல்களை அவர் கூறியிருந்தாரா? என்பதை ஆராய அவரிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டும் என போலீஸார் நீதிமன்றத்தில் கூறினர். எனவே, அவரது காவலை செவ்வாய்க்கிழமை வரை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு நீதிபதி அனுமதி அளித்தார்.
இந்நிலையில் இன்று மும்பை குற்றவியல் நீதிபதி என்.பி.ஷிண்டே முன்பு பீட்டர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பீட்டர் முகர்ஜியிடம் சிபிஐ மேற்கொண்ட விசாரணை தற்போது முடிவடைந்தது. அவரை நீதிமன்றக் காவலில் வைக்கலாம் என்றார். இதையடுத்து நீதிபதி ஷிண்டே, பீட்டரை வரும் 14-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.