

சரக்கு-சேவை வரி மசோதா நிறைவேறாமல் தடுத்து வருவதன் மூலம் காங்கிரஸ் கட்சி பொருளாதார சீர்திருத்தங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி குற்றம்சாட்டினார்.
தில்லியில் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டி:
உலக நாடுகளுக்கு இணையாக நேரடி வரி விதிப்பில் மாற்றங்களை கொண்டுவருவதற்கு அரசு விரும்புகிறது. ஆனால், சரக்கு-சேவை வரி மசோதாவை நிறைவேற்றாமல் தடுப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சி பொருளாதார சீர்திருத்தங்களுக்கு தடை ஏற்படுத்தி வருகிறது.
காங்கிரஸ் போன்ற தேசிய கட்சி இதுபோன்ற தடைகளை ஏற்படுத்துவதன் மூலம் ஒருவித வக்கிர இன்பத்தை அடைகிறது. இது இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியையும் பாதிக்கிறது.
முடக்கம் என்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இது ஒரு தவறான முன்னுதாரணமாகும். இதை மாநில பேரவைகளிலோ, வரும் கால எதிர்கட்சிகளோ தொடருமாமானல், மோசமான உதாரணமாகிவிடும்.
காங்கிரஸ் கட்சி தனது நிலையை மாற்றிக் கொள்ளாவிட்டால், நாடாளுமன்றம் இதுபோன்ற மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு தேவையான வேறு வழிகளை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். அதற்காக அமளிக்கு இடையே நிறைவேற்ற வேண்டும் என்பதில்லை.
இந்திய அரசியல் அமைப்பில் மாநிலங்களவை என்பது முக்கியமானது. அது இந்திய அடிப்படை கட்டமைப்பின் ஓர் அங்கமாகும். ஆனால், நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சபை மீது மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சபை தொடர்ந்து அதிகாரம் செலுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
மாநிலங்களவை என்பது மக்களவையின் நடவடிக்கைகளை சரிப்பார்த்து சமப்படுத்துவதற்கு ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும். மக்களவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு மாநிலங்களவை எதிர்ப்பு தெரிவிக்குமானால், கூட்டு கூட்டம் நடத்தி நிறைவேற்றலாம். ஆனால், அது அடிக்கடி நடைபெறக்கூடாது என்றார் ஜேட்லி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.