

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 8 ஆயிரம் கிலோ எடை கொண்ட லட்டு தயாரித்த ஆந்திராவைச் சேர்ந்த ஸ்வீட் நிறுவனத்துக்கு கின்னஸ் விருது வழங்கப்பட்டுள்ளது.
அதிக எடை கொண்ட இனிப்பு சுவை உணவை தயாரித்ததற்காக அந்நிறுவனம் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக கின்னஸ் விருது பெற்றுள்ளது.
ஆந்திராவின் தாபேஸ்வரம் நகரில் உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேய ஸ்வீட்ஸ் நிறுவனம் கடந்த விநாயகர் சதுர்த்தியையொட்டி 8 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒரு லட்டை தயாரித்தது.
இந்நிலையில், அதிக எடை கொண்ட லட்டை தயாரித்ததற்காக அந்நிறுவனத்துக்கு கின்னஸ் சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.
அந்த விருது சான்றிதழில், ''2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி எஸ்.வெங்கடேஸ்வர ராவ் என்பவருக்கு சொந்தமான ஆந்திராவின் தாபேஸ்வரம் நகரில் உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேய ஸ்வீட்ஸ் நிறுவன அதிக எடை கொண்ட லட்டு (8,369 கிலோ) தயாரித்துள்ளது'' என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெங்கடேஸ்வர ராவ், கடந்த விநாயகர் சதுர்த்தியின் போது எங்களது நிறுவனம் சார்பில் 8,000 கிலோ மற்றும் 6,000 கிலோ எடை கொண்ட இரு மகா லட்டுகள் தயாரிக்கப்பட்டு, விசாகப்பட்டிணம் மற்றும் விஜயவாடாவில் உள்ள விநாயகர் சிலைகளுக்கு படைக்கப்பட்டன என்றார்.
ஏற்கெனவே கடந்த 4 நான்கு ஆண்டுகளாக அதிக எடையுள்ள லட்டுகளை தயாரித்ததற்காக கின்னஸ் விருது பெற்றுள்ளதாக அவர் கூறினார்.
வரும் காலத்தில் 500 கிலோ எடை கொண்ட பால்கோவா தயாரித்து மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சீரடி சாய்பாபா சந்நிதானத்தில் படைக்கப்படும் என்றார் வெங்கடேஷ்வர ராவ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.