பண மதிப்பு நீக்க நடவடிக்கையை பெரும்பான்மையான இந்தியர்கள் வரவேற்கிறார்கள்: அருண் ஜேட்லி பேச்சு!
புதுதில்லி: அரசு எடுத்திருக்கும் பண மதிப்பு நீக்க நடவடிக்கையை பெரும்பான்மையான இந்தியர்கள் வரவேற்கின்றனர் என்றும், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த ஒத்துழைப்பு தருகிறார்கள் என்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்வது பற்றிய மாநாடு ஒன்று தில்லியில் இன்று நடைபெற்றது. அந்த மாநாட்டில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
பண மதிப்பு நீக்க நடவடிக்கையை பெரும்பான்மையான இந்தியர்கள் வரவேற்று ஒத்துழைப்பு அளிக்கின்றனர். இது தொடர்பாக எந்த ஒரு சமூக சீர்குலைவையும் காண முடியவில்லை. வங்கிகள் மற்றும் ஏ.டி.எம் வாசல்களில் நிற்கும் மக்கள் பெரும்பாலும் ஒழுங்கை கடைபிடிக்கின்றனர்.
இந்த நடவடிக்கைகள் மூலம் கிடைக்க போகிற நீண்ட கால பலன்களை எண்ணிப் பார்த்தே மக்கள் தற்போது பொறுமை காக்கின்றனர்.
கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவை வாட்டி வந்த கருப்பு பண தொல்லையை எதிர் கொள்ள உதவும் ஒரு இயல்பான விஷயமாகத்தான் இந்த நடவடிக்கை மக்களால் தற்போது பார்க்கப்படுகிறது.
புதிய மாற்றம் ஒன்றின் முனையில் நாம் இருக்கின்றோம். வரி விதிப்பாளர்களுக்கும்,அவர்களை ஏமாற்றுபவர்களுக்கும் இடையேயான போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இவ்வாறு அருண் ஜேட்லி தெரிவித்தார்.