மகாராஷ்டிர மாநிலம், ராய்கட் மாவட்டத்தில் உள்ள முருத்-ஜஞ்சீரா கடற்கரைக்கு சுற்றுலா வந்த புணே கல்லூரியைச் சேர்ந்த 14 மாணவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தில், மாயமான மேலும் சிலரைத் தேடும் பணியில் கடலோரக் காவல் படையும், விமானப் படையும் ஈடுபட்டு வருகிறது.
காணாமல் போன மாணவர்களின் உடல்களைத் தேடும் பணியில் விமானப் படை மற்றும் கடலோரக் காவல்படையின் ஹெலிகாப்டர்களும், கப்பல்களும் பயன்படுத்தப்பட்டு வருவதாக பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் கூறினார்.
10 மாணவிகள், 4 மாணவர்களின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் குறித்து கடலோரக் காவல் படையின் செய்தித் தொடர்பாளர், மும்பையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை தெரிவித்ததாவது:
புணே இனாம்தார் கல்லூரி மாணவர்கள் 126 பேர், மூன்று பேருந்துகளில் முருத் கடற்கரைக்கு சுற்றுலா வந்திருந்தனர். அவர்களில் சில மாணவர்கள் நீந்துவதற்காக கடலுக்குச் சென்றனர்.
அவர்களில், 15-18 மாணவர்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டதாக எங்களுக்கு மாலை 4 மணி அளவில் தகவல் வந்தது. அதைத் தொடர்ந்து, கடலோரக் காவல்படையின் விமானமும், இரண்டு படகுகளும் மீட்புப் பணிகளுக்காகத் திருப்பிவிடப்பட்டன. இதுவரை 14 மாணவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மற்றவர்களைத் தேடி வருகிறோம். மேலும், ஆறு மாணவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
எங்களுடன் இணைந்து, கடற்படையினரும் இரண்டு விமானங்களின் மூலம் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக, இனாம்தார் கல்லூரியின் நிர்வாகி பி.ஏ.இனாம்தார், புணேவில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ""இந்த விபத்தில் இதுவரை 14 மாணவர்கள் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், இறந்தவர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே, சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோரிடம் தகவல் தெரிவிக்கப்படும். மாணவர்களுடன், ஆசிரியர்கள் உள்பட 10 ஊழியர்கள் சுற்றுலா சென்றிருந்தனர். மீட்புப் பணிகளுக்காக, கல்லூரியில் இருந்து அதிகாரிகள் குழு விரைந்துள்ளது'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.