ஜெய்ப்பூர்: பிரதமர் நரேந்திரமோடியின் படம் இடம்பெற்ற கவர்ச்சி உடையை அணிந்த பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த். தனது அரைகுறை ஆடைகளினாலும், அதிரடிப்பேச்சினாலும் பிரபலமானவர். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடியின் படம் இடம்பெற்ற கவர்ச்சி ஆடை ஒன்றை அணிந்து கொண்டு எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் பரவின.
தற்போது ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமாந்த் மாவட்டத்தில் உள்ள கான்க்ரோலி கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் ராக்கி சாவந்த் மீது ஒப்புகார் கொடுத்துள்ளார். தன்னுடைய புகாரில் அவர், இத்தகைய உடை அணிந்ததன் மூலம் பிரதமரை அவமானப்படுத்தியதுடன், ஆபாச செய்கையிலும் ராக்கி ஈடுபட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய கான்க்ரோலி காவல் நிலைய அதிகாரி ஒருவர், 'வியாழன் இரவு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. ராக்கி மீது இந்திய தண்டனை சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்று வருகிறது'என்று தெரிவித்தார்.