புது தில்லி: 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று மோடி அறிவித்து 6 நாட்களில் பணத்தட்டுப்பாடு மற்றும் பணம் மாற்றும் நடவடிக்கையால் மட்டும் சுமார் 25 பேர் பலியாகியுள்ளனர்.
பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பினால் ஏற்பட்ட பிரச்னை, இன்னும் 50 நாட்களில் சீரடையும் என்று மோடி கூறினாலும், மக்கள் தங்களது இயல்பு நிலைக்குத் திரும்ப 4 மாதங்கள் ஆகும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
ஆனால், இந்த அறிவிப்பு வெளியாகி வெறும் 6 நாட்களிலேயே, பணத்தட்டுப்பாடு மற்றும் கூட்ட நெரிசல், மன உளைச்சல் போன்றவை இதுவரை 25 உயிர்களை பலிவாங்கிவிட்டது. இந்த 25 என்பது கூட பதிவானவை தான். இன்னும் பதிவு செய்யப்படாத இறப்புகள் அதிகமாகக் கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மருத்துவமனைக்கு பணம் கட்ட முடியாததால் சிகிச்சை பெறாமல் உயிரிழந்த பச்சிளம் குழந்தை, பணம் மாற்ற முடியாமல் 3 நாட்களாக தவித்து மன விரக்தியில் தறகொலை செய்து கொண்ட 24 வயது பெண், பணத்தை மாற்ற முடியாததால் குழந்தைகளுக்கு உணவு கொடுக்க இயலாமல் தற்கொலை செய்து கொண்ட பெண்மணி என இந்த பட்டியல் நீள்கிறது.
இவர்களில், வங்கிப் பணியின் போது நெஞ்சு வலியால் உயிரிழந்த எஸ்பிஐ காசாளர், மோடியின் அறிவிப்பினைக் கேட்டதுமே மாரடைப்பால் மரணம் அடைந்த பைஸாபாத் தொழிலதிபரும் அடங்குவர்.