சண்டிகார்: பஞ்சாப் மாநிலம் நபாவில் உள்ள மத்திய சிறையில் ஆயுதம் தாங்கிய குமபல் ஒன்று அதிரடி தாக்குதல் நடத்தி, சிறை வைக்கப்பட்டுள்ள காலிஸ்தான் தீவிரவாத இயக்கத் தலைவர் ஹர்மீந்தர் சிங் மின்டுவை மீட்டு சென்றனர்.
பஞ்சாப் மாநிலம் நபாவில் மத்திய சிறைச்சாலையொன்று அமைத்துள்ளது. இங்கு இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டு உள்ள காலிஸ்தான் விடுதலைப்படை இயக்கத் தலைவர் ஹர்மீந்தர் சிங் மின்டு உள்ளிட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை காவல்துறை சீருடை அணிந்து, ஆயுதம் தாங்கிய 10 பேர்கள் கொண்ட கும்பல் ஒன்று இந்த சிறைச்சாலை மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. அவர்கள் முதலில் கையெறி குண்டுகளை வீசி, பின்னர் துப்பாக்கி சூடு நடத்தினார்கள் என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.
தாக்குதல் நடத்தியவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ள காலிஸ்தான் தீவிரவாத இயக்கத் தலைவர் ஹர்மீந்தர் சிங் மின்டுவை மீட்டு சென்றனர். மேலும் சிறையில் இருந்து குர்பிரீத் சிங், விக்கி கோந்த்ரா, நிதின் தியோ மற்றும் விக்ராம்ஜீத் சிங் ஆகிய கூலிப்படை தலைவர்களையும் விடுவித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்த தாக்குதல் மற்றும் தப்பித்தல் சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர். முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. வாகனப் போக்குவரத்து சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.