இம்பால்: புகழ்பெற்ற மனித உரிமைப்போராளி ஐரோம் ஷர்மிளா மீதான தற்கொலை முயற்சி வழக்கை ரத்து செய்து இம்பால் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஐரோம் ஷர்மிளா (39). இவர் மணிப்பூரில் அமல் செய்யயப்பட்டுள்ள ' ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை' எதிர்த்து கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்தார்.
இதன் காரணமாக இவர் மீது இந்திய தண்டனை சட்டப் பிரிவு 307-ன் கீழ் தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ச்சியான சட்ட போராட்டங்களுக்குப் பிறகு , கடந்த ஆகஸ்ட்-9 ஆம் தேதி, இம்பால் மேற்கு மாவட்ட தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் இவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். சிறையில் இருந்து வெளிவந்த சிறிதுநேரத்தில் தேன் அருந்தி தன்னுடைய உண்ணாவிரதத்தை அவர் முடித்துக் கொண்டார். மேலும் தான் அரசியல் கட்சி ஒன்று தொடங்க உள்ளதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.
இன்றைய தீர்ப்புக்கு பிறகு ஷர்மிளா பேசுகையில், 'நன் இப்போது ஒரு சுதந்திர பெண்ணாகி விட்டேன். வரும் 10-ஆம் தேதி அரசியல் கட்சியொன்றைத் தொடங்கி நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிட உள்ளேன். இத்தனை நாள் நான் தனிமையில் இருந்துவிட்டேன், இப்போது பொதுமக்கள், மாணவர் அமைப்பினர், பல்வேறு இயக்கங்ககள் ஆகிய தரப்பினரை சந்திக்க ஆவலாக உள்ளேன். அவர்களின் இதயத்தோடும், மனதோடும் உரையாட விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.