கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பா.ஜனதாவில் இணைந்த காங்கிரசின்  முக்கிய தலைவர்! 

உத்தரபிரதேச மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் ரிட்டா பகுகுனா ஜோஷி இன்று பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித் ஷா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார்.

News image
Updated On :25 ஜனவரி 2024, 4:46 am

DIN

லக்னோ: உத்தரபிரதேச மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் ரிட்டா பகுகுனா ஜோஷி இன்று பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித் ஷா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பதற்காக சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் போன்ற கட்சிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

காங்கிரஸ் கட்சி டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தை தங்கள் முதல்வர் வேட்பாளராக அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ரிட்டா பகுகுனா ஜோஷி விரைவில் பா.ஜனதாவில் இணையலாம் என்று தகவல்கள் வெளியானது. அதற்கு ஏற்ப ரிட்டா பகுகுனா ஜோஷி பா.ஜனதா அமித் ஷா மற்றும் பிற தலைவர்களை சந்தித்து பேசினார் என்றும் தகவல்கள் வெளியாகியது. ஆனால் இதனை யூகங்கள் என்று ஜோஷியின் சகோதரர் விஜய் பகுகுனா நிராகரித்தார்.

இந்நிலையில்தான் ரிட்டா பகுகுனா ஜோஷி இன்று அமித் ஷா முன்னிலையில் பா.ஜனதா கட்சியில் இணைந்து உள்ளார். இணைப்பு நிகழ்விற்கு பிறகு ரிட்டா பகுகுனா ஜோஷி செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது:

சர்ஜிக்கல் ஆப்ரேஷன் தொடர்பான ராகுல் காந்தியின் கருத்து என்னை காயப்படுத்திவிட்டது. காங்கிரஸ் கட்சிக்காக நான் கடந்த 24 ஆண்டுகளாக பணியாற்றி வந்தேன். இப்போது நாட்டின் நன்மைக்காக இந்த முடிவை எடுத்து உள்ளேன். காங்கிரஸ் கட்சி எப்படி ‘சர்ஜிக்கல் ஆப்ரேஷன்’ தொடர்பாக கேள்வி எழுப்பலாம்?

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி முடிவெடுக்கும் போது எங்களுடைய கருத்தையும் கேட்பார், ஆனால் ராகுல் எங்களுடைய பேச்சு எதையும் கேட்பது கிடையாது. உத்தரபிரதேச மாநிலம் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளின் தவறான ஆட்சியில் இருந்து சுதந்திரம் அடையவேண்டும்.

இவ்வாறு பகுகுணா பேசினார். மேலும் பா.ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷாவையம் அவர் பாராட்டி பேசினார்.

ரிட்டா பகுகுனா ஜோஷி  2007 முதல் 2012 வரையில் உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த ரிட்டா பகுகுனா ஜோஷி முன்னாள் உத்தரபிரதேச மாநில முதல்வர் நாதன் பகுகுனாவின் மகள் ஆவார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.