அய்யாகண்ணு, ஆம் ஆத்மி கட்சி தலைவரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவாலை இன்று நேரில் சந்தித்து விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு கோரினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக விவசாயிகள் தில்லி ஜந்தர்மந்தர் பகுதியில் கடந்த மாதம் 16-ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று அவர்களின் போராட்டம் 24ஆவது நாளை எட்டியுள்ளது. இவர்களுக்கு ஆதரவாக மற்ற விவசாயசங்கங்களும் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். நாள்தோறும் பல போராட்டங்களை அறிவித்து நடத்தி வரும் விவசாயிகள் இன்று முக்காடு அணிந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இந்நிலையில் சங்கத் தலைவர் அய்யாகண்ணு, ஆம் ஆத்மி கட்சி தலைவரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவாலை இன்று நேரில் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு வலியுறுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அய்யாகண்ணு, எங்களது கோரிக்கைகள் தொடர்பாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை சந்தித்து பேசினோம். இதுதொடர்பாக அவர் பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்துவதாக தெரிவித்தார். பிரதமர் எங்களை எப்படியும் சந்திப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.