புது தில்லி: சோதனை அடிப்படையில் இந்தியாவின் 5 நகரங்களில் பெட்ரோல், டீசல் விலையை தினசரி அடிப்படையில் நிர்ணயிக்க பெட்ரோலிய நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
சோதனையின் அடிப்படையில் இந்த நடைமுறை வெற்றி பெற்றால், படிப்படியாக நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், மே 1ம் தேதி முதல் நாட்டின் 5 நகரங்களில் சோதனை அடிப்படையில், தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்ய பெட்ரோலிய எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
வல்லுநர்களின் பரிந்துரையை ஏற்று, சர்வதேச விலைக்கேற்ற வகையில் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிப்பது என பெட்ரோலிய எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்து, அதனை சோதனை செய்ய முடிவு செய்துள்ளது.
அதன்படி, புதுச்சேரி, விசாகப்பட்டினம், உதய்பூர், ஜம்ஷெட்பூர், சண்டிகர் ஆகிய நகரங்களில் மே 1ம் தேதி முதல் இந்த முறை நடைமுறைக்கு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இதுபோன்ற பெட்ரோலிய நிறுவனங்களின் விவகாரங்களில் மத்திய அரசு தலையிட முடியாது என்றும் அவர் கூறினார்.