இறவாப் புகழை எய்திவிட்ட குழந்தை வெண்பா நம் மனங்களில் நிறைந்து வாழ்வாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின்
உடலுறுப்புகளைக் கொடையளித்து இறவாப் புகழை எய்திவிட்ட குழந்தை வெண்பா நம் மனங்களில் நிறைந்து வாழ்வாள் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பது தொடர்பாக...


மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானம் வழங்கிய கோவையை சேர்ந்த சிறுமி வெண்பாவின் இல்லத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை நேரில் சென்று பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
கோயம்புத்தூர், தடாகம் சாலை, ஆர்.எஸ். புரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து, கோயம்புத்தூரில் தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த சிறுமி வெண்பாவிற்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு அடைப்பு உள்ளதாக கண்டறியப்பட்ட பின்பு அறுவை சிகிச்சை செய்து தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பிப்.25 ஆம் தேதி சிறுமியின் மூளை செயலிழந்ததை தொடர்ந்து, அவரது பெற்றோர்கள் ஒப்புதலோடு அச்சிறுமியின் சிறுநீரகம், கல்லீரல், தோல் மற்றும் கண் ஆகிய உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (பிப்.27) மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானம் வழங்கிய சிறுமி வெண்பாவின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது பெற்றோர் கோயம்புத்தூர் மாநகராட்சி நகரமைப்பு குழு தலைவர் சோமு (எ) சந்தோஷ் - சுகன்யா ஆகியோரை சந்தித்து, சிறுமியின் மறைவிற்கு ஆறுதல் தெரிவித்து, உறுப்பு தானம் வழங்கியதற்காக நன்றி தெரிவித்துக் கொண்டார்.

மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானம் வழங்கிய சிறுமி வெண்பாவின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது பெற்றோர் கோயம்புத்தூர் மாநகராட்சி நகரமைப்பு குழு தலைவர் சோமு (எ) சந்தோஷ் - சுகன்யா ஆகியோரை சந்தித்து, சிறுமியின் மறைவிற்கு ஆறுதல் தெரிவித்து, உறுப்பு தானம் வழங்கியதற்காக நன்றி தெரிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின்.
உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது. குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற நோக்கத்தையும், தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையிலும், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களால் 23.9.2023 அன்று உத்தரவிடப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதுவரையில், இறப்பிலும் பலருக்கு வாழ்வளித்த 653 பேருக்கு அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
இறவாப் புகழை எய்திவிட்ட குழந்தை வெண்பா
இந்த நிலையில், இறவாப் புகழை எய்திவிட்ட குழந்தை வெண்பா நம் மனங்களில் நிறைந்து வாழ்வாள் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
உடலுறுப்புகளைக் கொடையளித்து இறவாப் புகழை எய்திவிட்ட குழந்தை வெண்பா நம் மனங்களில் நிறைந்து வாழ்வாள்.
பெற்றெடுத்த அன்பு மகளை இழந்த வலியையும் தாங்கிக் கொண்டு, மாந்தநேயத்தோடு அந்தக் குழந்தையின் உடலுறுப்புகளைக் கொடையளித்த பெற்றோர் சோமு மற்றும் சுகன்யா ஆகியோருக்கு நமது அன்பு ஆறுதலாய் துணை நிற்கட்டும்!
சோமு நமது திமுகவில் நிர்வாகியாக இருந்து மக்களுக்குத் தொண்டாற்றுவதில் பெருமை கொள்கிறேன்.
அறிவியல் மனப்பான்மையோடு சிந்தித்துச் செயல்படும் தமிழ்நாடு வளரட்டும்! இறப்பிலும் புதுவாழ்வளிக்கும் இந்தக் கருணை உள்ளங்களே போற்றுதலுக்குரிய தியாகிகள்! என கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...