பயணிகள் அதிகம் பயணம் செய்யும் தில்லி-லக்னௌ போன்ற வழித்தடங்களில் குளிர் சாதன வசதியுடன் கூடிய இரட்டை அடுக்கு இருக்கை வசதி கொண்ட இரவு நேர ரயிலை வரும் ஜூலையில் ரயில்வே இயக்கவுள்ளது.
இதுகுறித்து தில்லியில் ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:
உத்கிரிஷ்ட் இரட்டை அடுக்கு ரயில் அல்லது உதய் விரைவு ரயில் என்ற பெயரில் குளிர்சாதன வசதியுடன் கூடிய இரட்டை அடுக்கு இருக்கை வசதி கொண்ட ரயில் விடப்படுகிறது. இந்த ரயிலை வரும் ஜூலை மாதத்தில் இந்திய ரயில்வே தொடக்கி வைக்கிறது. புது தில்லி-லக்னௌ போன்ற பயணிகள் அதிகம் பயணம் செய்யும் வழித்தடங்களில் இரவு நேரத்தில் இந்த ரயில் விடப்படுகிறது.
இந்த ரயிலில் ஒவ்வொரு பெட்டியிலும், தலா 120 பேர் வரை உட்கார்ந்து பயணம் செய்ய முடியும். ரயிலில் சூடான உணவு வகைகள் மற்றும் குளிர்பானங்களை அளிக்கும் இயந்திரங்கள் நிறுவப்படும்.
பயணிகள் கட்டணமானது, வழக்கமான மெயில் ரயில் மற்றும் விரைவு ரயில்களில் 3-ஆம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகளுக்கு வசூலிக்கப்படும் டிக்கெட் கட்டணத்தை விட குறைவாக இருக்கும். ரயிலில் ஒவ்வொரு பெட்டியிலும் மிகப்பெரிய எல்சிடி தொலைக்காட்சிப் பெட்டி வைக்கப்பட்டிருக்கும். இதில் இருந்து, பயணிகளின் இருக்கைகளுடன் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் ஹெட்போன்களுக்கு வை-ஃப மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் சத்தம் அனுப்பப்படும்.