நீதி ஆயோக் அமைப்பின் முதல் துணைத் தலைவரான அரவிந்த் பனகரியா, தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை தகவல்கள் தெரிவிப்பதாவது: மத்திய அரசின் கொள்கைகளை வகுப்பதற்காக திட்டக் குழுவுக்குப் பதிலாக பாஜக அரசு ஏற்படுத்திய அமைப்பு நீதி ஆயோக். இந்த அமைப்பின் தலைவராக பிரதமர் உள்ள நிலையில், அதற்கு அடுத்த நிலையிலுள்ள துணைத் தலைவர் பதவியில் முதல் முறையாக அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த பொருளாதார வல்லுநர் பனகரியா நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பதவியிலிருந்து அவர் ராஜிநாமா செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து பனகரியா கூறுகையில், பல்கலைக்கழகப் பணியைத் தொடர்வதற்காக தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த மாதம் 31-ஆம் தேதி வரை நீதி ஆயோக்கின் துணைத் தலைவராக அவர் பொறுப்பு வகிப்பார். பனகரியாவின் ராஜிநாமாவைத் தொடர்ந்து, இந்தியாவில், மிக முக்கிய உயர் பொறுப்பிலிருந்து வெளியேறும் அமெரிக்க இந்தியப் பொருளாதார நிபுணர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.
ஏற்கெனவே, ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன், அந்தப் பதவியைத் தொடராமல் விலகியது குறிப்பிடத்தக்கது.