

விஜயவாடா: புவனேஸ்வரில் இருந்து ஹைதராபாத் நோக்கி வந்து கொண்டிருந்த சொகுசுப் பேருந்து கிருஷ்ணா மாவட்டம் மூலப்படு என்ற இடத்தில் சாலையோரம் இருந்த கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இன்று காலை 5.30 மணியளவில் பேருந்து கால்வாயின் மீது கட்டப்பட்டிருந்த மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, திடீரென தடுப்புச் சுவரை இடித்துக் கொண்டு கால்வாயில் விழுந்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த கிராம மக்கள், காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். பேருந்தில் இருந்தவர்களையும் மீட்டனர். சுமார் 22 அடி ஆழமுள்ள கால்வாயில் பேருந்து தலைக்குப்புற விழுந்ததால், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது.
பேருந்தில் இருந்த 40 பயணிகளை காவல்துறையினரும், பொதுமக்களும் சேர்ந்து மீட்டனர். அவர்களில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 3 பேர் நண்டிகாமா அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பலியாகினர். ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானார். காயமடைந்தவர்களில் 10 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், பேருந்து ஓட்டுநர் தூங்கிவிட்டதாலும், விபத்து நேரிட்ட போது பேருந்து அதி வேகத்தில் இயக்கப்பட்டதும் விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, உயிரிழந்தவர்களின் உடல்களை உடனடியாக பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கவும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
விபத்தில் பலியானவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.