புதுதில்லி: இரு பிரிவுகளாக பிரிந்து போராடும் சமாஜவாதி கட்சியின் 'சைக்கிள்' சின்னம் யாருக்கு எனபது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தெரிவித்தார்.
விரைவில் நடைபெறவிருக்கும் ஐந்து மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் சமாஜவாதி கட்சியின் சைக்கிள் சின்னம் யாருக்கு ஒதுக்கப்படும் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்துப் பேசிய ஜைதி கூறியதாவது:
சமாஜவாதி கட்சியின் சின்னம் யாருக்கு ஒதுக்கப்படும் என்பது ஒரு ஊகத்தின் அடிப்படையிலான கேள்வி. இரு தரப்பும் தேர்தல் ஆணையத்திடம் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளன. அந்த ஆவணங்களை பரிசீலித்த பின் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
முன்னதாக தாங்கள்தான் உண்மையான சமாஜவாதி கட்சி என இரு பிரிவுகளாக பிரிந்து போராடும் முலாயம் சிங் மற்றும் அவரது மகனும் உத்தரபிரதேச முதல்வருமான அகிலேஷ் சிங் ஆகிய இரு தரப்பினரும் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை அடுத்தடுத்த நாட்களில் சந்தித்து மனு கொடுத்தனர் எனபது குறிப்பிடத்தக்கது.