மிதியடிகளில் தேசியக் கொடி: சுஷ்மா ஸ்வராஜ் எச்சரிக்கைக்கு அடிபணிந்தது அமேஸான்
இந்திய தேசியக் கொடி பதிக்கப்பட்ட மிதியடிகளை விற்பனை செய்யக் கூடாது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா விடுத்த எச்சரிக்கைக்கு அமேஸான் அடிபணிந்துள்ளது.


புது தில்லி: இந்திய தேசியக் கொடி பதிக்கப்பட்ட மிதியடிகளை விற்பனை செய்யக் கூடாது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா விடுத்த எச்சரிக்கைக்கு அமேஸான் அடிபணிந்துள்ளது.
அமேஸான் இணையதளத்தின் விற்பனைப் பட்டியலில் இருந்து, இந்திய தேசியக் கொடி பதிக்கப்பட்ட மிதியடிகள் நீக்கப்பட்டுள்ளன.
வட அமெரிக்கா நாடான கனடாவில் இந்திய தேசியக் கொடி பதிக்கப்பட்ட மிதியடிகளை அமெரிக்காவைச் சேர்ந்த அமேஸான் நிறுவனம் விற்பனை செய்வது வருவதாக சுட்டுரையில் இந்தியர்கள் புகார் அளித்தனர்.
அதையடுத்து, சுஷ்மா ஸ்வராஜ் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்திய தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் விற்பனை செய்யப்பட்டுவரும் அனைத்து பொருள்களையும் அமேஸான் திரும்பப் பெற வேண்டும். இனி, அதுபோன்ற பொருள்களை அந்த நிறுவனம் விற்பனை செய்யக் கூடாது. அத்துடன், நிபந்தனையற்ற மன்னிப்பும் அந்த நிறுவனம் கேட்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனில் அந்த நிறுவன அதிகாரிகளுக்கு இந்தியா வர நுழைவு இசைவு (விசா) அளிக்கப்பட மாட்டாது. ஏற்கெனவே அந்த நிறுவன அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள நுழைவு இசைவு அனுமதியும் ரத்து செய்யப்படும் என்று சுஷ்மா ஸ்வராஜ் அந்தப் பதிவில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனையடுத்து, இந்த விஷயத்தை கவனத்தில் எடுத்துக் கொண்டு சரிசெய்வதாக 'அமேஸான்' நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.
முன்னதாக, அமெரிக்காவில் ஹிந்துக் கடவுள்களின் உருவங்கள் பதிக்கப்பட்ட மிதியடிகளை அமேஸான் நிறுவனம் விற்பனை செய்ததற்கு எதிராக இந்தியர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.
அதைத் தொடர்ந்து, அவற்றை விற்பனை செய்வதை அமேஸான் நிறுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...