நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பயிர்க் கடன் தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் கடன்பெற்ற அனைத்து விவசாயிகளின் பயிர்க் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த

News image
Updated On :3 ஜூலை 2017, 11:30 pm

DIN

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் கடன்பெற்ற அனைத்து விவசாயிகளின் பயிர்க் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில், விவசாயிகள் பெற்ற சிறு, குறு பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்து, கடந்த ஆண்டு ஜூன் 28-  ஆம் தேதி தமிழ்நாடு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசாணை வெளியிட்டது.
5 ஏக்கருக்குள் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மட்டும் அனைத்து பயிர் கடன்களையும் தள்ளுபடி செய்வதாக அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 'இந்த அரசாணை சட்ட விரோதமானது. இதை ரத்து செய்து, அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்' என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.அய்யாக்கண்ணு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடுத்தார்.
இது தொடர்பான மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஏப்ரல் 4- ஆம் தேதி அளித்த தீர்ப்பில், 'தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியைக் கருத்தில் கொண்டு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கடன்பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்' என உத்தரவிட்டது.
மேல்முறையீடு: இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் கடன்பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்' என கோரப்பட்டிருந்தது.
தடை: இந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி. லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு திங்கள்கிழமை விசாரித்தது. அப்போது, 'அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது. இது தொடர்பாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் பதில் அளிக்க உத்தரவிடப்படுகிறது' என தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.