ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

தனிநபர் ரகசியங்களைக் காப்பது அடிப்படை உரிமையல்ல: உச்ச நீதிமன்றம் விளக்கம்

தனிநபர் ரகசியங்களை காப்பது என்பது அனைவருக்கும் அளிக்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமை என அறுதியிட்டுக் கூற முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

News image
Updated On :19 ஜூலை 2017, 8:36 pm

DIN

தனிநபர் ரகசியங்களை காப்பது என்பது அனைவருக்கும் அளிக்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமை என அறுதியிட்டுக் கூற முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
சில நேரங்களில் மக்களின் தனிப்பட்ட தகவல்களை பகிரங்கமாக வெளியிடாமல் தவிர்க்கலாமே தவிர, அத்தகைய விவரங்களை எதற்காகவும் திரட்டவே கூடாது என்று வாதிடுவது ஏற்புடையதல்ல என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஒருவேளை தனிநபர் ரகசியம் காப்பதை அடிப்படை உரிமையாக்கி உத்தரவிட்டால், ஒருவருக்கு எத்தனை குழந்தைகள் உள்ளன என்பதைக் கூட வெளிப்படையாக அறிந்து கொள்ள முடியாத சூழல் உருவாகிவிடும் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டைக்காக மக்களின் தனிப்பட்ட விவரங்களை சேகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டும், விமர்சனங்கள் எழுப்பப்பட்டும் வரும் நிலையில் இத்தகைய விளக்கத்தை உச்ச நீதிமன்றம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரை கட்டாயமாக்கி தற்போதைய மத்திய பாஜக அரசு முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக பல்வேறு மனுக்கள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டன. மக்களின் தனிப்பட்ட விவரங்களை சேகரிப்பது முறையல்ல என்றும் அது தனிநபர் ரகசிய காப்புக்கு எதிரானது என்றும் அந்த மனுக்களில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதையடுத்து அந்த மனுக்களை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், தனிநபர் ரகசியம் காப்பதை மக்களின் அடிப்படை உரிமையாக்குவது குறித்து விசாரிக்க முடிவு செய்தது. இதையடுத்து அந்த விவகாரம் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ் கேஹர் தலைமையிலான அந்த அமர்வில் நீதிபதிகள் ஜே. செலமேஸ்வர், எஸ்.ஏ. பாப்தே, ஆர்.கே. அகர்வால், ரோஹின்டன் ஃபாலி நாரிமன், அபய் மனோகர் சாப்ரே, டி.ஒய். சந்திரசூட், சஞ்சய் கிஷண் கௌல், எஸ். அப்துல் நஸீர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில், அந்த அமர்வு முன்பு தனிநபர் ரகசியக் காப்பு விவகாரம் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் தனிநபர் ரகசியங்களைக் காப்பதை அடிப்படை உரிமையாக்க வேண்டும் என வாதிடப்பட்டது. அதைத்தொடர்ந்து மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வமான வாதத்தில் அதற்கு எதிரான கருத்துகள் இடம்பெற்றிருந்தன. இதன் பின்னர் நீதிபதிகள் கூறியதாவது:
அனைத்து விவகாரங்களையும் தனிநபர் ரகசியம் காக்கும் நடவடிக்கைகளின் கீழ் கொண்டுவர இயலாது. அந்தரங்க விஷயங்களை பகிரங்கப்படுத்த முடியாது. அதேவேளையில், அனைத்து விஷயங்களையும் ரகசியம் என்ற பெயரில் மறைக்கவும் முடியாது. ஒருவேளை தனிநபர் ரகசியம் காப்பதை அடிப்படை உரிமையாக்கிவிட்டால், மகப்பேறு தகவல்கள் கூட அந்த வரம்பின் கீழ் கொண்டு வரப்படலாம். அதன் பிறகு, அனைத்து குழந்தைகளும் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என அரசு கட்டாயப்படுத்த முடியாது என்றுகூட பெற்றோர் வாதிடலாம்.
தகவல்கள், தரவுகள் ஆகியவற்றின் அடிப்படையிலான காலத்திலேயே நாம் வாழ்ந்து வருகிறோம். வங்கிக் கணக்கு விவரங்கள், வருமான வரித் தாக்கல் விவரங்கள், குற்றவாளிகளின் விவரங்கள் என பல்வேறு தகவல்கள் துறைரீதியாக ஆவணப்படுத்தப்படுகின்றன.
ஆனால், தனிநபர் ரகசியம் காக்கும் உரிமை வழங்கப்பட்டால் மேற்குறிப்பிட்ட நடைமுறைகளே கேள்விக்குறியாகிவிடும். எனவே, இந்த விவகாரத்தை முறைப்படுத்தலாமே தவிர, அடிப்படை உரிமையாக அறிவிக்க இயலாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து விசாரணையை வியாழக்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.