

கொழும்பு: இலங்கை சிறைகளில் உள்ள 89 தமிழக மீனவர்களை விடுதலை செய்யலாம் என்ற இலங்கை தலைமை நீதிபதியின் பரிந்துரையினைத் தொடர்ந்து,அவர்கள் அனைவரும் நாளை விடுதலை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள், தங்களது கடல் எல்லைக்குள் அத்துமீறி புகுந்து மீன் பிடித்ததாகக் குற்றம் சாட்டி, இலங்கை கடற்படை அவர்களைக் கைது செய்வது தொடர்கதையாக உள்ளது. அவ்வாறு கைது செய்யப்படும் மீனவரகளது படகு உள்ளிட்ட பொருட்களும் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்படும்.
அந்த வகையில் இந்த ஆண்டு மே மாதம் 1-ஆம் தேதிமுதல் ஜூலை 22-ஆம் தேதி வரை கைது செய்யப்பட்ட 89 தமிழக மீனவர்கள் தற்பொழுது இலங்கை சிறைகளில் உள்ளனர். இவர்கள் தொடர்பான வழக்கு இன்று இலங்கை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது மனிதாபிமான அடிப்படையில் இலங்கை சிறைகளில் உள்ள 89 தமிழக மீனவர்களை விடுதலை செய்யலாம் என்று இலங்கை தலைமை நீதிபதி பரிந்துரை செய்தார். இதனை அரசுத்தரப்பும் ஏற்றுக் கொண்டதனைத் தொடர்ந்து, அவரகள் அனைவரும் நாளை விடுதலை செய்யபபடலாமென்று தெரிகிறது.
விடுதலைக்குப் பின்னர் அவர்கள் அனைவரும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள். அதேநேரம் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் உள்ளிட்டவற்றை திரும்ப அளிப்பது பற்றி எதுவும் தகவல் இல்லை.
சமீபத்தில்தான் அத்துமீறி பிரவேசிக்கும் தமிழக மீனவர்களுக்கு அதிக அளவில் அபராதம் விதிக்கும் சட்டத்தினை இலங்கை அரசு நிறைவேற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.