

குடியரசுத் தலைவர் மாளிகையின் அதிகாரப்பூர்வ சுட்டுரை (டுவிட்டர்) பக்கம் ராம்நாத் கோவிந்த் பெயருக்கு மாற்றப்பட் டுள்ளது. அதில் இதுவரை இருந்த பிரணாப் முகர்ஜியின் படம் மாற்றப்பட்டு ராம்நாத் கோவிந்த் படம் இடம் பெற்றுள்ளது.
புதிய குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை பதவியேற்றதை அடுத்து இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.
குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் அனைத்தும் இந்த சுட்டுரைப் பக்கத்தில்தான் வெளியிடப்பட்டு வருகின்றன. இதனை குடியரசுத் தலைவரின் செயலர்கள் நிர்வகித்து வருகின்றனர்.
பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராக இருந்தபோது வெளியிட்ட சுட்டுரைப் பதிவுகள் அனைத்தும் பாதுகாப்பு நினைவகத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. இதையடுத்து, பிரணாப் முகர்ஜி புதிதாக தனக்கென தனி சுட்டுரைக் கணக்கைத் தொடங்கியுள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டர் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு அதிகாரிகளில் ஒருவரான மஹிமா கெளல் கூறியதாவது:
இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் நிகழும் மாற்றங்கள் அனைத்தும் சுட்டுரையிலும் நிகழ்ந்து வருகின்றன. அந்த வரிசையில் குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ சுட்டுரைக் கணக்கு ராம்நாத் கோவிந்த்தின் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே, அவர் இந்தப் பக்கத்தை தனது அதிகாரப்பூர்வ சுட்டுரைக் கணக்காக பயன்படுத்தலாம். இன்றைய நவீன யுகத்தில் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதில் சுட்டுரை போன்ற சமூக வலைதளங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்றார்.
ராம்நாத் கோவிந்த்தின் முதல் சுட்டுரைப் பதிவில் அவர் குடியரசுத் தலைவராக பதவியேற்ற நிகழ்ச்சியின் படங்களும், அவரது உரையும் இடம் பெற்றுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.