புதுதில்லி: பாலியல் பலாத்காரத்தின் காரணமாக 32 வார கருவை வயிற்றில் சுமந்து வரும் 10 வயது சிறுமியின்,கருவினை கலைக்க அனுமதி கோரிய மனுவினை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்தது.
பஞ்சாப் மாநிலம் சண்டிகாரில் உள்ள சிறுமியொருத்தி பாலியல் பலாத்காரத்தினால் பாதிக்கப்பட்டாள். அவளது வயிற்றில் வளரும் கருவை கலைப்பதற்கு கடந்த ஜூலை 18-ம் தேதி உள்ளூர் மாவட்ட நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து சிறுமியின் நலன் கருதி கருவை கலைப்பதற்கு அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இம்மனு மீது கடந்த 24-ம் தேதி உச்சநீதி மன்றத்தில் விசாரணை நடந்தது. அப்பொழுது பாதிக்கப்பட்ட சிறுமியை பரிசோதனை செய்து ஜூலை 26-ம் தேதிக்குள் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சண்டிகாரில் உள்ள பட்ட மேற்படிப்பு மருத்துவ மையத்தில் சிறுமிக்கு மருத்துவப்பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த மருத்துவ அறிக்கையானது உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது
இந்நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது சிறுமியின் 32 வார கருவை கலைக்க அனுமதி கோரிய மனுவை நிராகரித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
கருவை கலைப்பது பாதிக்கப்பட்ட சிறுமிக்கும், வயிற்றில் வளரும் குழந்தைக்கும் நல்லது கிடையாது என அளிக்கப்பட்டுள்ள மருத்துவ அறிக்கையின்படியே நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது
முன்னதாகவே இது போன்ற வழக்குகளில் கருக்கலைப்பு செய்ய உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டி, ஒவ்வொரு மாநிலத்திலும் மருத்துவ வாரியத்தை அமைப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து நீதிமன்றம் தனது கருத்தை தெரிவித்து உள்ளது.