உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றுள்ள நிலையில், அந்த மாநிலத்தின் வளர்ச்சிதான் அரசின் ஒரே குறிக்கோளாக இருக்கும்; உ.பி.யின் வளர்ச்சிதான் நாட்டின் வளர்ச்சி என்று பிரதமர் நரேந்திர மோடி தெளிவுபடுத்தியுள்ளார்.
உத்தரப் பிரதேச பாஜகவில் உள்ள பல்வேறு தலைவர்களைத் தாண்டி, தீவிர ஹிந்துத்துவ வாத கருத்துக்களைக் கொண்டவரான யோகி ஆதித்யநாத்தை புதிய முதல்வராக அக்கட்சி தேர்வு செய்தது. இது சிறுபான்மையினரிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தலாம் என்ற கருத்து எழுந்தது.
இந்நிலையில், லக்னௌவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதைத் தொடர்ந்து, யோகி ஆதித்யநாத் அரசு குறித்து யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்பதை சூசகமாக உணர்த்தும் வகையில், மோடி சுட்டுரையில் வெளியிட்ட பதிவுகளில் கூறியுள்ளதாவது:
அண்மையில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களில் நான்கில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. சிறப்பான, விவேகமான இந்தியாவை உருவாக்குவதற்கான நமது முயற்சிககள் தொடர்ந்து நீடிக்கும். புதிய மற்றும் உருமாற்றம் பெற்ற இந்தியாவின் எழுச்சிக்கு நாட்டின் மக்கள் சக்தி ஊக்கமளித்து வருகிறது. உத்தரப் பிரதேசம் சாதனை படைக்கும் அளவுக்கு வளர்ச்சியடைவதற்கு புதிய அரசு பாடுபடும்.
நமது ஒரே குறிக்கோளும் இலக்கும் வளர்ச்சிதான். உத்தரப் பிரதேசம் வளர்ச்சி பெறும்போது தேசமே வளர்ச்சியடையும். உத்தரப் பிரதேசத்தின் இளைஞர்களுக்கு சேவையாற்றவும், அவர்களுக்காக வாய்ப்புகளை உருவாக்கவும் நாங்கள் விரும்புகிறோம்.
யோகி ஆதித்யநாத் (முதல்வர்), கேசவ் பிரசாத் மௌர்யா, தினேஷ் சர்மா (துணை முதல்வர்கள்) மற்றும் அமைச்சர்களாகப் பதவியேற்ற அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கிறேன். உத்தரப் பிரதேசத்துக்காக சேவையாற்ற வாழ்த்துக்கள் என மோடி தெரிவித்துள்ளார்.