ஸ்ரீஹரிகோட்டா: தெற்காசிய நாடுகளின் பயன்பாட்டுக்காக முழுக்க இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட ஜிசாட் 9 செயற்கைக்கோளை சுமந்தபடி ஜிஎஸ்எல்வி எஃப்09 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
தெற்காசிய நாடுகளின் பயன்பாட்டுக்காக ஜிசாட் 9 செயற்கைக்கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். தெற்காசிய மண்டல நாடுகளில் பாகிஸ்தானைத் தவிர, மற்ற நாடுகளின் கூட்டுத் திட்டத்தில் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது.
2 ஆயிரத்து 230 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், தகவல் தொடர்புக்கு உதவும் 12 கே.யு. பேண்ட் கருவிகளைச் சுமந்து செல்கிறது. இதன் ஆயுள் காலம் 12 ஆண்டுகளாகும். தெற்காசிய நாடுகளில் ஏற்படும் பேரழிவு தொடர்பான தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்கும் வல்லமை கொண்ட இந்த செயற்கைக்கோள், ஜி.எஸ்.எல்.வி. எஃப்09 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டமான இந்த ஜிசாட்9 செயற்கைக்கோள் திட்டத்தை நேரில் காண பத்திரிக்கை மற்றும் காட்சி ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் ஏவப்படக் கூடிய ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் குறித்த விவரங்களை வழக்கமாகி இஸ்ரோ தனது இணையதளம், சமூக ஊடகங்களில் செய்தியாக வெளியிடும். ஆனால், இம்முறை ராக்கெட் கவுன்ட்டவுன் நேரம் மட்டுமே வெளியிட்டது.
ஆந்திரம் மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து, மாலை 4.57 மணிக்கு ராக்கெட் விண்ணுக்கு செலுத்தப்பட்டது. இதற்கான கவுன்ட்டவுன் ஸ்ரீஹரிகோட்டாவில் வியாழக்கிழமை பகல் 12.57 மணிக்கு தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது தொடர்பாக பிரதமர் மோடி நேரடியாக தொலைக்காட்சியில் உரையாற்ற உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.